ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 11, 2018

பல நினைவுகளில் நாம் இல்லாமல் “ஈஸ்வரா.....!” என்று ஒரு நிலையில் பரிபக்குவ நிலை பெறுதல் வேண்டும்


ஒருவர் நோயோடு ரொம்ப வேதனைப்படுகிறார் என்று நாம் பார்க்கின்றோம். ஐயோ.. பாவமே…! என்று சொல்லி விட்டு அந்த நோயை நீக்குவதற்கு அவருக்கு நாம் உதவி செய்கிறோம்.

ஆனாலும் அந்த இடத்தில் பரிபக்குவம் இல்லை என்றால் என்ன ஆகும்….?
1.அவரின் நோயின் தன்மையைப் பற்றிக் கேட்டு நுகர்ந்த பின்
2.அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த நோயின் தன்மை நமக்குள் வரும்.

நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அதை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெற வேண்டும். அவர் உடல் நலமாக வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அவருக்கு வந்ததைப் பார்த்து “ஐயோ...! என்றால்...
1.நமக்குள்ளும் ஐயோ என்று அந்த நோயை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.
2.அவர் பட்ட வேதனையைத்தான் உருவாக்கும்.

நல்லதைச் செய்கிறேன் என்ற நிலையில் “நான் அதைச் செய்கிறேன்... இதைச் செய்கிறேன்...! என்று அந்தப் பக்குவ நிலை தவறினால் என்னாகும்..?

வடையைச் சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் காயாமல் தட்டிப் போட்டால் ஒரு வடை போட்டால் வேகும். இரண்டாவது வடையை போட்டவுடன் சூடு அமர்ந்து விடும்.

அப்போது வடை வேகுமா…? எண்ணெயைத்தான் எடுத்துக் கொள்ளும். சட்டியில் எண்ணெய் காணமல் போகும். வடையில் ருசி இருக்காது.

ஆகையால் வாழ்க்கையில் எந்த ஒரு தீமை என்ற உணர்வை நுகர்ந்தாலும் அடுத்த கணம் அதைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற நிலைக்குப் பக்குவம் வர வேண்டும்.

ஒருவன் தீய வினைகளைச் செய்கிறான். அதைப் பார்க்கிறோம் என்றால் அது நமக்குள் வராதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை வைத்துத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்தாற் போல் யாரிடம் சொன்னாலும் குற்றங்களில் இருந்து அவன் மீள வேண்டும்... “மீள்வான்...!” என்று சொல்ல வேண்டும். ஆனால்
1.பாருங்கள்…! இந்த மாதிரித் திட்டிக் கொண்டு இருக்கின்றான்.
2.நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்று கோபமாகச் சொன்னால் என்ன செய்யும்?

பக்குவம் தவறினால்... இதே உணர்வு கோபமாக அவரையும் நம் மீது திருப்பிப் பேசச் செய்யும். நம் மீது தான் குற்றவாளி ஆக்கும். ஏனென்றால்
1.அவன் உணர்வு நமக்குள் வந்து
2.இதே சொல் அங்கே போய்
3.நம்மைக் குற்றவாளியாக ஆக்கும்.
4.அப்போது தவறு செய்பவனுடைய உண்மையை நாம் எடுத்து சொல்ல முடியாது.

ஆகவே அந்த மாதிரி ஆகாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் பெறவேண்டும்... உண்மையை அவர் உணர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் அந்தப் பரிபக்குவத்தைப் பெற்று தீமையை நமக்குள் புகாதபடி தீமையை மாற்ற வேண்டும். நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சாமியார் செய்வார்... சாமி செய்யும்.. கடவுள் செய்வார்... என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால்
1.உள் நின்று இயக்கும் நம் உயிரே கடவுள்
2.நாம் எண்ணிய உணர்வே நமக்குள் கடவுளாகின்றது – அதுவே நம்மை இயக்குகின்றது.

தீமையான இயக்கங்களிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். தீமையை நீக்கிய மகரிஷிகளின் உணர்வினை எடுத்து ஒவ்வொரு செயலையும் நமக்குள் பக்குவப்படுத்த வேண்டும்.

அந்த நிலை பெறுவதற்காகத்தான்
1.பாட்டை மட்டும் பாடி விட்டுப்
2.பல நினைவில் நான் இல்லாமல் பரி பக்குவ நிலை நான் பெற
3.எனக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை வேண்டிக் கேட்கின்றோம்.