ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2018

வெள்ளைத் துணியைப் போட்டிருக்கின்றாய்… ஆனால் உன் உடலுக்குள் “எத்தனை சாக்கடை இருக்கிறது தெரியுமாடா…?” என்று கேட்டார் குருநாதர்


வியாசகன் படிக்காதவன் தான். ஆனால் பத்து அவதாரம் என்ற உண்மைகளை உணர்த்தியவன் வியாசகன் தான்…! அந்த வியாசக பகவான் காட்டிய அருள் வழிப்படி நாம் மெய்ப் பொருளைக் கண்டுணர்வோம்.

ஏனென்றால் எத்தனையோ வகையான சிக்கல்களில் நாம் இருக்கின்றோம். சாமி (ஞானகுரு) ஏதாவது சொல்வார்… கேட்போம்…! என்று வருவீர்கள். அந்த ஏக்கத்தில் வரும் பொழுது ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகின்றது.

இந்த உணர்வின் துணை கொண்டு அந்த மகா ஞானிகளின் உணர்வலைகள் உங்களுக்குள் திருப்பப்படுகின்றது.

அதே நினைவைக் கொண்டு விண்ணை நோக்கி ஏகிக் கூர்மையாக எண்ணப்படும் பொழுது கூர்மை அவதாரமாக ஒளியின் சரீரமாக உங்களை மாற்றும் வல்லமை பெறுகின்றீர்கள்.

அதே சமயத்தில் அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது அது வராகனாக அது வலு கொண்ட நிலையாக உங்களுக்குள் வளர்கின்றது.

சலிப்போ சங்கடமோ வேதனையோ கோபமோ ஆத்திரமோ இதைப் போன்ற மற்ற உணர்வுகளை நுகராத வண்ணம் அந்த ஞானிகளின் உணர்வை வலு கொண்டதாகச் சேர்க்கும் வராக அவதாரம் என்ற நிலையைப் பெறுகின்றீர்கள்.

இவை அனைத்தும் குருநாதர் பித்தனைப் போன்று இருந்து எமக்கு உபதேசமாகக் கொடுத்தார். இந்த உலகமே சாக்கடைக்குள் இருக்கின்றது.

வராகன் சாக்கடையை நீக்கிவிட்டு அதற்குள் மறைந்த நல்ல உணர்வை எப்படி எடுத்ததோ இதைப்போல உன்னுடைய நினைவு அனைத்தும் விண்ணை நோக்கி அந்தக் கூர்மையான நிலைகளை எண்ணி அந்த அருள் ஞானிகளின் நிலைகளை எடுத்து மெய் ஒளி காணும் நிலையாக நீ பெற வேண்டும் என்றார்.

நீ பெறுவது மட்டுமல்லாது எல்லோரும் இதைப் போல மெய் வழி காணும் நிலை பெறச் செய்ய வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் அசுர சக்திகள் நீங்க வேண்டும்.

மெய்ப் பொருள் காண வேண்டும் என்று அவர்களை நீ பிரார்த்திக்க வேண்டும். அவர்கள் அதைப் பெற வேண்டும் என்று அதையே நீ தியானிக்க வேண்டும்.

அப்பொழுது அது உனக்குள் வலு பெறுகின்றது.  உன் சொல்லும் வாக்கும் அது உயர்வு பெறுகின்றது. உன் சொல்லைக் கேட்பவர்களின்  நிலைகளுக்குள்ளூம் மெய்ப் பொருள் காணும் அந்த உணர்வின் சக்தியாக அங்கே விளைகின்றது என்ற நிலையைக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

ஆனால் இந்த உண்மையினை உணர்த்திய அவரைப் பார்த்தோம் என்றால்
1.மனிதனாக மதிக்கும் நிலையற்ற நிலையில்
2.குப்பையிலும் கூளத்திலும் மண்ணிலும் புரண்டு கொண்டிருந்தார்
3.புறத்திலே பார்க்கும் பொழுது அருவருக்கத்தக்க இடங்களில் அவர் இருக்கின்றார்.

அப்போது நான் (ஞானகுரு) அவரைப் பார்த்து.. “ஏன் சாமி நீங்கள் இப்படி இருந்து கொண்டிருக்கின்றீர்கள்…!” என்று கேட்டேன்.

1.நீ வெள்ளைத் துணியை ஆடையாகப் போட்டிருக்கிறாய்.
2.ஆனால் உனக்குள்ளே எவ்வளவு சாக்கடை இருக்கின்றது என்று தெரியுமாடா…?
3.உனக்குள் பல சாக்கடை இருக்கின்றது… மேலே வேஷம் போடுகின்றாய்…!
4.உடல் மீது படும் அழுக்கைப் போக்கத் தினமும் நீ குளிக்கின்றாய்
5.ஆனால் உன் உணர்வுக்குள் படும் சாக்கடையை நீ நீக்க வேண்டும் அல்லவா…!
6.அதை நீக்குவதற்குத்தான் உன்னை அந்த  மெய் ஞானியின் உணர்வைப் பெறச் செய்கிறேன் என்றார் குருநாதர்.

குருநாதர் காட்டிய வழியில் நாம் அனைவரும் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். வியாசகரின் அருள் சக்திகளைப் பெறுவோம்.