ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2018

வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும்… “மகிழ்ச்சியைக் கொண்டு வரும் பயிற்சி…!”


சாதாரணமாக ஒரு குழம்பு வைக்கும் போது அதைப் பக்குவமாக வைத்து எவ்வளவோ ருசியாகச் செய்கின்றோம்.

அந்தப் பக்குவம் தெரியவில்லை என்றால் என்ன ஆகின்றது…?

மசாலுக்குத் தேவையானதை எல்லாம் வறுத்து எடுத்து வைத்து இருப்பார்கள். அரைக்கும் நிலையில் பக்குவமில்லாமல் போனதென்றால் குழம்பு ருசி கெட்டுப் போகும்.

குழம்பிற்குள் காய்கறிகளைப் போடும் பொழுதும் எந்த நேரத்தில் அதைப் போட வேண்டும்…? எதனுடன் எதைக் கலக்கின்றமோ அதற்குத் தகுந்த மாதிரி அந்தக் காய்கறியினுடைய ருசி குழம்புடன் இணையக்கூடிய தன்மை வரும்.

அதே சமயம் குழம்பு வைக்கும் போது
1.முதலில் உப்பைப் போட்டு விட்டால் இந்த உப்பு எல்லாவற்றுடன் சேர்ந்து உள்ளுக்குள் போய்விடும்.
2.வெளியில் இருப்பது “சப்..” என்று இருக்கும். ஆனால் மென்று தின்றால் சில நிலைகள் உப்பாக இருக்கும்.
3.மேலே பார்க்கும் போது உப்பு இல்லை என்று எண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் போட்டால் எல்லாமே உப்பாக மாறிவிடும்.

ஆகவே உப்பை அது எந்த நேரத்தில் போட வேண்டும் என்று தெரிந்து போட்டால் அது சுவை தரும்.

சமையல் தெரிந்திருந்தாலும் சில நேரங்களில் சங்கடமான நிலைகளில் இருக்கும் பொழுது
1.எந்த நேரத்தில் எப்பொருளைச் சேர்க்க வேண்டும் என்று தெரியாதபடி கலந்து விட்டால்
2.குழம்பும் சாப்பாடும் சுவை கெட்டுப் போய்விடும்.

இந்த வாழ்க்கையில் நாம் செல்வத்தைச் சேர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் உணர்வுகளுக்குள் அறியாது வந்து சேரும் கோபம் ஆத்திரம் வேதனை போன்ற தீமை செய்யும் உணர்வுகளை நீக்கும் பழக்கம் இல்லை என்றால் நம் நல்ல சிந்தனைகள் குறைந்து சீராகச் செய்யும் செயல்கள் குன்றி வேதனைகள் வந்துவிடுகின்றது.

நமக்குள் வேதனையான உணர்வுகள் அதிகமாகி விட்டால் உடல் நோய் மன நோய் வந்துவிடுகின்றது. அதனால் குடும்பத்தில் அமைதி இழக்கப்படுகின்றது.

இதிலிருந்து மீண்டிடும் நிலையாக ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்டி காலையில் ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
2.என் மனித வாழ்க்கையில் வந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய் வழியில் நாங்கள் செல்ல வேண்டும்.
4.மெய் உணர்வுகள் எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.

இந்த உடலை என்றுமே ஒளிச் சரீரமாக மாற்றும் அந்த உணர்வுகள் எனக்குள் வளர வேண்டும் ஈஸ்வரா…! என்ற இந்த எண்ணத்துடன் நீங்கள் தியானத்தில் அமருங்கள்.

இந்த வலுவை நீங்கள் கூட்டிக் கொண்டால் நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் படைக்கின்றது. தெளிந்து… தெரிந்து… “தெளிவான வாழ்க்கை வாழ..” இத்தகைய பயிற்சி உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள். மன பலம் பெறுவீர்கள். மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் இணைந்து வாழும் தகுதியைப் பெறுவீர்கள். எமது அருளாசிகள்…!