ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 20, 2018

பிறந்தது “பெண்” என்று தெரிந்தாலே அதைக் கொன்று விடும் அளவிற்கு “மனிதத் தன்மையற்ற நரகலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்...!”


பெண் குழந்தைகள் பிறந்து விட்டாலோ நரகலோகமும் சேர்த்தே வந்து விடுகின்றது. ஏனென்றால் நாளைக்குக் கட்டிக் கொடுக்கின்ற வரையிலும் அதற்கு எத்தனையோ பொருளாதாரத் தேவை... மற்ற எல்லாம் வந்து விடுகின்றது.

இதற்காக வேண்டி இப்போது சில இடங்களில் பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களைக் கொன்றே விடுகின்றார்கள்.

குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் பிறந்தது பெண் என்று தெரிந்தால் அந்தக் குழந்தையைக் கொல்லுகின்றார்கள்.
1.இன்றைக்கு வாழ முடியவில்லை என்றால்
2.மனிதனாகப் பாசமாக இருந்தாலும்
3.மனிதத் தன்மையற்ற நிலையில் தன் இனத்தையே அழித்திடும் நிலை வந்து விட்டது.

பெண்ணாக இருந்தாலும் தாய் பாசத்தைப் பற்றி நிறையப் பேசுவார்கள். ஆனால் திருமணமாகி அடுத்து மாமியாராக ஆகிவிட்டால்
1.அந்தப் பெண் இனமே
2.பெண்ணைப் (மருமகளை) பேயாக ஆட்டிப் படைக்கின்றது.

நியாயத்தைப் பேசுகின்றோம்; தர்மத்தையும் பேசுகின்றோம்; ஆயிரம் கோயில்களுக்குச் செல்லுகின்றோம்; ஆயிரம் தர்ம நியதிகளைப் பேசுகின்றோம்.

ஆனால் மனிதனுக்குள் ஆசை என்ற நிலைகளில் உட்புகுந்த அசுர சக்திகளால் இரக்கமற்ற நிலைகள் கொண்டு தன் மகள் வேறு... தன் மருமகள் வேறு...! என்று தான் பார்க்கின்றார்கள்.

வந்த மருமகளை மகளாக எப்படி மதிக்க வேண்டும்...? உயர்ந்த குணங்களை எப்படிக் கொண்டு வர வேண்டும்...? என்ற நிலை இல்லை.

தான் எண்ணியபடி வரவில்லை என்றால் பொருள் (பணம்) இல்லை என்றால் அது மருமகள் அல்ல. அது பேய் என்ற நிலைகள் வருகின்றது. (கேட்டால் என் மாமியாரும் என்னை இப்படித்தான் நடத்தினார் என்பார்கள்)

ஆக பெண் இனமே பெண் இனத்தை மதிக்காத நிலைகள் கொண்டு துன்புறுத்திக் கொண்டிருக்கும் அசுர சக்திகளாக இயக்கிக் கொண்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு செயலிலும் நம்மை அறியாதபடி தீங்கை விளைவித்து அதன் வழி இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு
1.நமக்குள் நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு
2.வேதனையான நரகலோகத்தை நமக்குள் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றோம்.
3.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அத்தகைய தீமைகளிலிருந்து..
4.நரகலோகத்திலிருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.

ஆகையினாலே இதைப் படித்துணர்ந்த அனைவருமே நம்மை அறியாது உட்புகுந்து நமக்குள் தீமை விளைவித்து கொண்டிருக்கும் அந்த அசுர சக்தியிலிருந்து விடுபடும் நிலையாக
1.நாம் அந்த மக்களை... அந்தப் பெண் இனத்தைக் “காக்கும் சக்தியை வளர்ப்போம்”
2.மெய் ஞானிகளின் உணர்வை வளர்ப்போம்
3.வளர்த்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு தீமைகளை அகற்றுவோம்
3.நாம் விடும் மூச்சலைகளால் தீமையை அகற்றிடும் சக்தியாக நாம் பரவச் செய்வோம்
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உலகை அடைவோம்

இருளுக்குள் மறைந்த பொருளை ஒளி பட்ட பின் அதைத் தெரிந்து கொள்கின்றோம். அது போல் நமது வாழ்க்கையில் அறியாது வந்த இருள்கள் நல்லதைக் காணவிடாது மறைத்தாலும் அந்த அருள் ஞானி உணர்வை நாம் சுவாசித்துப் பொருளைக் காண முடியும்.

அந்த அருள் ஞானியின் உணர்வலைகள் நமக்குள் விளைந்து நம் எண்ணம் சொல் செயல் எல்லாமே ஒளியின் சுடராகப் பெறுவோம். அழியாத ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்.