ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 19, 2018

நம் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்யக்கூடிய செயல்களால் மகிழ்ச்சி அடைகிறோமா....? துயரப்படுகின்றோமா...!


அன்பால் பாசத்தால் பரிவால் நாம் வாழ்ந்து வந்தாலும் நம்மை அறியாது புகும் தீமைகள் என்ன செய்கின்றது...?

தன்னை அடுத்தவர்கள் மதிக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் எல்லோரும் வேண்டி விரும்பிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஒரு காரியத்தையோ செயலையோ சொன்னபடி சொன்ன நேரத்தில் நாம் செய்யவில்லை செய்ய முடியவில்லை என்றால்
1.மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்
2.எல்லோர் முன்னாடியும் கேவலமாகப் பேசுவார்கள் என்று
3.நம்மை அறியாமலே நமக்குள் இந்தத் தீய சக்திகள் வளர்ந்து
4.நம் நல்லதைக் காக்க முடியாத நிலைகள் துயர் கொண்டு அலையத் தொடங்குகின்றோம்.

அதே போன்று தான் கௌரவமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நம் காது பட யாராவது ஒருவர்... “ஆஅ...! இவர் பெரியவரா...?” என்று சிறிதளவு சொன்னால் போதும்.
1.உன்னைத் “தொலைத்துக் காட்டுகின்றேன் பார்...!” என்று
2.அப்பொழுதே நம் அசுர உணர்வுகள் புகுந்து கொள்கின்றது
3.அப்புறம் தன் கௌரவத்தை எப்படிக் காப்பாற்றுவது...! முடியுமா...?

தொலைத்துக் கட்டுகின்றேன் என்ற உணர்வை எடுத்தவுடனே அது நல்ல உணர்வுக்குள் சேர்ந்து விடுகின்றது. சேர்ந்தவுடனே நல்ல உணர்வுகளை வேலை செய்யவிடாது.

என்னை இப்படிச் செய்தானே..! அவனை... “இரண்டில் ஒன்று பார்க்கின்றேன்... இரண்டில் ஒன்று பார்க்கின்றேன்...!” என்ற இந்த உணர்வு வரும்.

அந்த உணர்வு வந்தவுடனே நோயாக உருவாகின்றது. இப்படி நம் நல்ல குணங்களை இந்த அசுர சக்திகள் கொல்லுகின்றது.

உதாரணமாக மாமனார் வீட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இங்கே மாப்பிள்ளை வீட்டில் சம்பந்தி என்ற நிலையில் “உங்கள் அப்பா மாப்பிள்ளைக்கு என்ன செய்கிறார்...?” என்று மருமகளைக் கேட்பார்கள்.

அவர்களிடம் இல்லை என்று தெரியும். தெரிகின்றது. தெரிந்த பின்  சரி இருக்கட்டும்...
1.நாளைக்கு அவருக்கு நல்ல வருமானம் வரட்டும்…!
2.வருமானம் வந்த பின் மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் செய்யட்டும்…! என்று
3.அந்த ஊக்கத்தை நாம் யாராவது சொல்கின்றோமா என்றால் இல்லை.

சாஸ்திரத்தையும் பேசுவோம். சட்டத்தையும் பேசுவோம். என் பையனுக்குச் செய்யவில்லை என்றாலோ என் மருமகளுக்குச் செய்யவில்லை என்றாலோ இன்று நான் பேசுவேன்.

ஆனால் என் பெண்ணுக்கு நான் செய்யவில்லை. என்னால் செய்ய முடியவில்லை என்றால் அவர்களைப் பிடித்துப் பேசுவோம். இதே மாதிரித்தான் மற்றவர்களும் பேசுகின்றார்கள்.

நியாயம் பேசுவது நாம் தான்....! நம்முடைய உணர்வுகளுக்கொப்ப “இப்படித்தான்” (மாற்றி) பேசுகின்றோம்.

ஏனென்றால் நம்மை அறியாமலே இந்த அசுர சக்திகள் தான் நம் நல்ல குணங்களை அழித்து கொண்டு இருக்கின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஒருவரால் முடியவில்லையா.., சரி இருக்கட்டும்...! அவருக்கு நல்ல வருமானம் வரட்டும்; நமக்குச் செய்யட்டும்; அவர்களுக்குள் அன்பு வளரட்டும்; பண்பினுடைய நிலைகள் வளரட்டும்; ஞானிகள் காட்டிய அருள் வழியில் சகோதர உணர்வுகள் வளரட்டும்; தீமைகள் நுழையா வண்ணம் இருக்கட்டும்; தீமையான உணர்வுகள் வளராது தடுக்கும் நிலையாக வரட்டும் என்கிற வகையில் யாராவது எண்ணுகின்றோமா என்றால் இல்லை.

இராமன் காட்டிற்குள் அலைந்தான் என்று இராமயாணத்தைப் பற்றிப் பேசுவோம்...! கண்ணன் எத்தகைய கீதா உபதேசம் சொல்கின்றான்...! என்று அதையும் கேட்போம்.

வியாசகர் எத்தனையோ பெரிய தத்துவத்தை வேதங்களை எழுதி வைத்தார். அதில் சாஸ்திர நுணுக்கங்கள் எத்தனையோ வைத்துள்ளார். அந்த வேத சாஸ்திரப் பிரகாரம் தான் எல்லாம் நடக்கின்றது என்று சொல்வார்கள்.

அதையெல்லாம் நாம் சீராகக் கேட்டுக் கொள்வோம். ஆனால் அவர்கள் வரதட்சணைக் கொடுமையில் இருந்து மீட்டுவதற்கு இல்லை.
1.பெண் வீட்டில் சரியாகச் செய்யவில்லை.
2.உடனே பெண்ணை அவர்கள் வீட்டிற்கு “விரட்டி விடு…” என்பார்கள்.

இன்றைக்குத் தங்கம் விலை ஜாஸ்தியாக இருக்கின்றது. அதே சமயத்தில் நான்கைந்து  பெண்கள் வீட்டில் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் படுகின்ற அவஸ்தையைப் பார்த்தால் நரகலோகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

நாம் என்றைக்குக் கஷ்டத்திலிருந்து மீள்வது...? இந்தப் பிள்ளைகளை எல்லாம் எப்படிக் கரை சேர்ப்பது...? என்று இப்படிப்பட்ட வேதனையைத்தான் உருவாக்க முடிகின்றது.

எப்படியோ கடனை வாங்கிக் கல்யாணம் செய்து கொடுத்தாலும் அடுத்தாற்போல கடனைக் கட்ட முடியவில்லை என்றால் தற்கொலைக்குத் தான் செல்கிறார்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு எங்கே போனாலும் நரக லோகத்திற்குத்தான் அழைத்துச் செல்லுகின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

மனிதன் என்று உருவாகிவிட்டாலே அவன் முழு முதல் கடவுள் தான். நம் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் கூர்மையாகி ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி ஏங்குதல் வேண்டும்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...!  அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்த வேண்டும்

நம் உடலான இந்திரலோகத்தில் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்து தீமையற்ற உலகமாக உருவாக்கிடல் வேண்டும். இந்த இந்திரலோகத்திற்குள் தீமையான அசுர சக்திகள் நுழையாது தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஊடுருவச் செய்தல் வேண்டும்.

நாம் பிறரிடம் பேசினாலும் கேட்போருடைய நிலைகள் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலையாக அவர்கள் துன்பத்தை நீக்கும் நிலையாக நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் நம்மை அறியாமல் சேர்க்கும் அந்த தீமையிலிருந்து விடுபட்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு
1.மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
2.சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்
3.சகோதரத்துவத்தை வளர்த்திட வேண்டும் என்பதற்காகத்தான்
4.ஞானிகள் சாஸ்திரங்களை நமக்கு அமைத்துக் கொடுத்தார்கள்.

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா.