ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2023

“ஈஸ்வர அனுபூதி…” பெற வேண்டுமப்பா…!

உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழிகாட்டிடவும் வேண்டும்.

பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?

ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.

1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.

தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!

வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.

நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.

நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”

“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.

திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராக செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.