ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2023

மெய் ஞானப் பாடத்தைப் புகட்டும் வழி

மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?

கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.

செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை… அறிந்து கொண்டதை கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.

மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?

மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.

ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”

ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.

1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து சினம் தவிர்க்கும் உபாயம் விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.