ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2023

இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நாளும் வளர்க்க
1.நாம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மட்டுமல்லாதபடி…
2.அது வலுவாகும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் இன்னொரு பிறவிக்கு வராதபடி
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் சென்று இந்த உடல் பெற்ற நஞ்சுகளை அங்கே கரைத்து
4.பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதற்கு நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களை விண் செலுத்தினால் அவருடைய தொடர் கொண்டு நாம் அந்த சக்தி எளிதில் பெற முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி தீய உணர்வுகளை நல்ல அணுக்களாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி ஊசி மூலம் மருந்தை ஏற்றி அதை இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்து நோய் உருவாக்கும் அணுக்களை மாற்றி அமைக்கின்றார்களோ அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி
2.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

உடலை உறுப்புகளை உருவாக்கி அணுக்களில் எல்லாம் காந்தம் உண்டு. இதை இணைத்து அங்கே பெருக்கச் செய்ய வேண்டும். உடலில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் நீங்கும். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

கஷ்டம் என்பதைத் தள்ளி விடுங்கள். குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

நீங்கள் இடும் மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலே பரவி இந்தப் பூமியும் பரிசுத்தமாகும் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் தெளிவாக இது உதவும்.

ஆகவே இந்தத் தியானத்தை மேற்கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பரப்புங்கள்
1.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றிடுங்கள்
2.அருள் ஞானத்தின் உணர்வைக் குவியுங்கள்… எல்லா இடங்களிலும் பரவச் செய்யுங்கள்
3.இந்த பூமியில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளை மாற்றி அமையுங்கள்.

அருள் உணர்வு கொண்டு சகோதர உணர்வை வளர்த்து ஒன்றுபட்டு வாழும் சக்தியைப் பெருக்குங்கள் இதை நாம் செய்தோமென்றால் சகோதர உணர்வுகள் வளரும். அருள் ஞானம் பெருகும்.
1.அருள் வாழ்க்கை வாழும் இந்தியாவாக… மகரிஷிகள் நாடாக மாற்றலாம்
2.இதை வைத்து உலகையே மாற்ற முடியும்.

ஏனென்றால் அணுவிசையால் இந்த உலகையே அழித்திடும் தன்மைகள் வரப்படும் பொழுது அந்த அணுக்கதிரியக்கங்கள் பரவாதபடி தடுத்து நிறுத்தும் சக்தி
1.இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் பெறுவோம் என்றால்
2.உலகையும் நாம் காக்கும் திறன் பெற முடியும்… அணுகுண்டுகள் வெடிக்காதபடி நாம் செய்ய முடியும்.
3.விஷத்தன்மை பரவாதபடி கதிரியக்கங்கள் வெளிப்படாதபடி செய்ய முடியும்.

முழுமையாக இதை நம்புங்கள் உங்களுக்கு அந்தத் திறன் உண்டு உலக இருளைப் போக்குவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். விஞ்ஞானத்தின் செயலினால் வரும் தீமைகளில் இருந்து மக்களை விடுவிப்போம்.

ஆகவே… அருள் உணர்வுடன் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள் என்று பிராத்திக்கின்றேன்.