ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2023

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.

ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.

அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.

இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.

1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்