ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2023

அன்னத்தின் மேல் அமர்ந்துள்ள “கலைமகளின் மறைபொருள்”

மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?

பாணன் இசைக்கின்றான்... அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை... உயிரைப் பற்றி நிற்கின்றது…”

இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.

நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை...” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.

மோகத்தின் பால் சிக்குண்ட மனம்...
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக... மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே... சித்தன் சுட்டிக்காட்டிய “அன்னம்”

1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது

அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”

அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக... ஓங்கார நாதத் தொனியாக... “நாதத்தின் தலைவியாம் கலைமகள்...” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக... ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே...?

ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.