ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2023

அசுர குணங்களிலிருந்து நாம் மீளக்கூடிய நன்னாள் தான் தீப ஒளித் திருநாள்

தீப ஒளி என்றால் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் மற்ற தன் அருகில் இருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் காணச் செய்கின்றது.

இதே போன்று நமது உயிர் நமக்குள் ஒளியாக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை இந்த ஒளி கொண்டு அந்த உணர்வின் குணத்தையும் மணத்தையும்… “உணரும் வழியில் - மணத்தின் வழியில்” நமக்கு உணர்த்துகின்றது… அறியச் செய்கின்றது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலையில் அறியச் செய்கின்றது.

நமது உயிர் நமக்குள் தீபமாக இருந்து… சுடராக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
1.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது
2.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் அதை நினைவுபடுத்தும் நன்னாள்தான் தீப ஒளி நன்னாள்

அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… கூட்டுத் தியானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய நன்னாளாக நாம் அமைத்திடல் வேண்டும்.

இன்றைய நாள்… எப்படி நாம் புத்தாடையைப் போர்த்தி அணிந்து மகிழ்கின்றோமோ… இதே போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் நல்ல குணத்துடன் இணைத்து… இந்த வாழ்க்கையில் அந்த தூய்மைப்படுத்தும் உணர்வினை…
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தெளிந்த மனதுடன் தெளிந்திடும் சக்தியாகப் போர்த்தச் செய்வது தான்
2.இந்த உபதேசமும் அதன் வழியில் தியானத்தின் மூலம் பெறக் கூடிய சக்தியும்.

பகைமை உணர்வுகள்… பாசத்தால் கேட்டறிந்த பார்த்துணர்ந்த வேதனை உணர்வுகள்… சந்தர்ப்ப பேதத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகள்… இவையெல்லாம் அசுர குணங்கள் கொண்டது.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளை நாம் அனைவரும் ஒருக்கச் சேர்ந்து… ஏகோபித்து அந்தச் சக்தியைப் பெற்று… நம்மை அறியாது இயக்கும் அத்தகைய அசுர குணங்களிலிருந்து மீட்டிடும் நன்னாளாக நாம் நினைவு கொண்டு… அதனின் வலு துணை கொண்டு… அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்து வரவேண்டும்.