ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 19, 2023

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

1.அன்பு வழி காட்டி… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாகச் செயல்படுபவன் …
2.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
3.பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசிக்கும் செயல்பாடு உடையவனாக இருத்தலும்
4,தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாக வெளிப்படும் பொழுதே
5.போதனையை ஏற்றுத் தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த உபதேசத்தை ஏற்றவன்
6.அந்த நன் நெறியில் பிறழாமல் “அந்த அன்பையே பற்றுக்கோடாகக் கொண்டிட்ட எண்ண செயலினால்…”
7.நல்வழி வகைச் செயலைக் கடைப்பிடிப்போன்… மனிதன் என்ற முழுமை பெறுகின்றான்.

அன்பும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி அதனுடைய நிலைகள் இன்று ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. யாரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம்முடைய வழி...!

மனித எண்ணத்தையும் அன்பு சாமராஜ்யத்தையும் ஆள வந்த அந்த மகானுக்கே தந்த பரிசு “சிலுவையில் ஏற்றப்பட்டதுதான்…” இன்றும் உண்மைகளைப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா.

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை இந்த உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
1.உலக மக்கள் படும் இன்னல்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு
2.தாய்மையின் உணர்வு கொண்டே ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி
3.உயர்நிலை பெறவே ஊட்டிட்டார் ஊட்டிட்டார் அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாயிடம் தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களைச் செவிமடுத்தனர்.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயல்படாதொழிந்த அந்தக் குழப்ப சூழ்நிலையில்… உண்மையை உணர்த்தி அவர் அளித்திட்ட போதனைகள் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை அளித்து… அதனால் ஈர்க்கப்பட்டனர் என்றால் “அந்த அன்பின் திறத்தை என்னவென்பது…?”

அன்பு தானப்பா கடவுள்…!

சத்திய நிலை கடைப்பிடித்த அந்த மகான்களுக்கே அவச்சொல் என்றால் சிந்தனா சக்தி செல்லும் வழி தான் என்ன…?
1.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா… கூட்டங்களை அவர் கூட்டினார்…?
2.இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகின்றது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுபவர்… எண்ணிக்கையில் பலர் இருப்பினும் அவர்களும்… வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியை அறிந்து அந்த மகான் காட்டிய வழிதனைக் கடைப்பிடிக்க முயல்வோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலைத் தன்னில் கண்ட இயேசுபிரான் “சைத்தான்” என்று காட்டியது தீய குணங்களைத்தான்.

தீய குணங்களுக்கு மனம் ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி… அவைகளைப் பக்குவமாக விலக்கிடவே தியானத்தின் வழியாக காட்டப்பட்டது தான் அப்பமும் மீனும்.

வழி தவறிச் செல்லும் ஆடுகளை மீட்க வந்த மேய்ப்பர் என்று அவரை அழைக்கின்றார்கள். நேசிக்கும் மனோபாவத்தை அன்பு நிலையைக் கூற வந்த மகான் இயேசு உபதேசித்த நெறிமுறைகள் அனைத்தும் ஒலி அலைகளாக இந்தப் பூமியின் நாதத்தில் கலந்து சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அரிய போதனைகளைத் தியான வழி ஈர்ப்பின் செயலில் ஈர்த்தே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ண வலுவிற்குச் சிந்தனை வசப்பட்டு அதை முயற்சி செய்வோர் இல்லையப்பா.

1.நாம் சொல்வது யார் மனதையும் வேதனைப்படுத்துவதற்காக அல்ல.
2.உண்மைகளை கூறினாலும் ஏற்றுக் கொள்வோரும் மிக அரிதாகவே உள்ளனரப்பா
3.அவைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…
4.தியானத்தின் வழிதனில் அதை அறிய முயல்வோர்கள் முயலட்டும்.