ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2023

நம்மைச் சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

“ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?

1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் கண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?

அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையா… அல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)

குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு… அதற்கு மேல் கடிவாளமிட்டு… தான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு… இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து… நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக… ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக…
6.(தன்) மன எண்ணத்தின் இலயிப்பு விளங்கிடல் வேண்டும்.

அதுவே சித்தனாக ஆகும் சீரிய வழியாகும்…!

அப்படி அல்லாதபடி… பஞ்சபூத புரவிகள் இயங்கிடும் இயக்கம்… செயலுறும் செயலில்… “மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்சபூதங்களாய் வழி நடத்தும் “உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல்” என்ன ஆவது…?

ஆகவே…
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு…
3.தர்மத்தின் செயலுறும் வழியில்… சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)

4.அதிலே உவகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலையப்பா…!