ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2023

தியானப் பயிற்சி

1.எம்மை நேரடியாக நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
2.இருக்கும் இடத்திலிருந்து எண்ணினாலே என்னுடைய (ஞானகுரு) அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

அந்தப் பயிற்சியைத் தான் இங்கே கொடுக்கின்றேன்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அம்மா அப்பா தான் முதல் தெய்வங்கள் அவர்களால் தான் நாம் உடல் பெற்றோம். அவர்களின் நல்லாசி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று இந்தப் பேருண்மைகளை எல்லாம் எனக்கு உணர்த்தியது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கண்ணிலே ஏங்கி நேராக உற்றுப் பார்த்துத் தியானியுங்கள்.

இப்போது கண் வழியாக அதை இழுத்துக் கவர்கின்றீர்கள் அடுத்து கண்ணின் நினைவு புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அங்கே காந்தம் இருக்கின்றது அதிலே நாம் துருவ நட்சத்திரத்தினைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம்.

ஆனால் வழக்கமாக நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கின்றோம். நுகர்கின்றோம் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் நம்மைத் தெரிய வைக்கின்றது… இயக்குகின்றது.

ஆனால் அதை முதலில் சொன்ன முறைப்படி புருவ மத்தி வழியாகத் துருவ நட்சத்திரத்தை அந்தக் காந்தத்தின் வழி கவரும் பொழுது பிற தீமைகள் சுவாசத்தின் வழி உள்ளே புகாதபடி துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் அடைப்பாகி விடுகிறது.

ஆகவே தீமைகள் நமக்குள் போகாது நாம் தடைப்படுத்தி விடுகின்றோம்.

ஆனால் உள்ளே சென்றுவிட்டால் இரண்யன். நல்ல அணுக்களை அது கொன்றுவிடும் அது வேதனை கடும் நஞ்சு அதை நாம் குரு காட்டிய வழியில் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தினை கண்களிலே நினைத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா கண்ணைத் திறந்தே தியானியுங்கள். பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று அப்படியே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரத்தங்களில் அதனைக் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் கலக்க வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று செலுத்தி விட்டு அடுத்து அந்த இரத்தம் போகும் பாதைகள் அனைத்துமே அந்த இரத்தங்கள் முழுவதுமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

அது உடல் முழுவதும் சுழன்று எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய எல்லா ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

நாம் மற்றவருடன் பிரியமாக பழகி அன்புடன் இருந்து அவர் திடீர் இறந்து விட்டால் நம் மீது பாசமாக இருந்தால் அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் இருக்கும்.

அவருடைய கெட்டதெல்லாம் இரத்தத்தில் இருந்து கொண்டு நமக்கு அது தொல்லைப்படுத்தும் நிலையாக வரும். நம்முடைய சிந்தனைகளைக் குறைக்கும். அது உடலுக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அவசியம் நாம் அந்த நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பரவ வேண்டும் என்று நினைவைச் செலுத்த வேண்டும்.

அடுத்து இந்த வாயு மண்டலங்கள் அதாவது அந்த நரம்பு மண்டலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

நாம் சர்வ காலம் கண்களில் எத்தனையோ உற்றுப் பார்க்கின்றோம். எக்ஸ்ரே எப்படி ஊடுருவிச் செயல்படுத்துகின்றதோ அது போன்று கண்களால் பார்த்த்து எலும்புக்குள் ஊனாக இருக்கும்.

நான் எதையெல்லாம் பார்க்கின்றோமோ வரிசையில் அங்கே பதிவாக்கிக் கொண்டே இருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து அதில் இருக்கக்கூடிய ஊனில் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

மீண்டும் புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே நினைவைச் செலுத்துங்கள்.

இப்படியே மாற்றி மாற்றி எல்லா இடங்களுக்கும் நினைவைச் செலுத்தி பல முறை தியானியுங்கள்.
1.இப்படிச் செய்ய இது என்ன காசா பணமா…? ஒன்றும் இல்லை.
2.உங்கள் நினைவு மட்டும் தான். இதைச் செய்வதற்கு என்ன வந்தது…?
3.சிறிது நாளைக்குப் பழகிக் கொண்டால் தன்னாலே வேலை செய்யும்.

நல்லது திட்டியவனையோ அல்லது உடல்நிலை பற்றிய வேதனையோ திரும்பத் திரும்ப எண்ணுவதற்குப் பதிலாக அருளைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலே போதுமானது.

ஏனென்றால் இனி வரக்கூடிய காலங்கள் மிக விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும்… அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு பல வகைகளிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் பன்றி எப்படிச் சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்ல மணத்தை நுகர்கின்றது.

அதே போன்று நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அதன் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு உங்கள் சிந்தனை கலையாது உங்கள் வாழ்க்கையை அருள் ஞானத்தை போதிக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

1.இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தோடு இணைய வேண்டும்
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று அதைப் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேசம்.