ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2023

நம் ஆத்மாவின் வலு “திடம் பெற வேண்டியது” மிகவும் முக்கியம்

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு மட்டும் அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை... அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்...” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்...
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு...” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா...! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.