ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2024

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாக இருந்தாலும் மகரிஷிகள் அனைவரும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலைத்துள்ளார்கள்.

இன்னொரு மனித உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
2.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் “நமக்கு வலு வேண்டும்…”

சாதாரண ஒரு நூலினைக் கொண்டு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அந்த நூல் அறுந்து விடுகின்றது.

இது போன்று தான் சாதாரண மக்களாக இருக்கக்கூடிய நாம்
1.அந்த ஞானிகள் மகரிஷிகளின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களை அவருடைய உணர்வுகளை
2.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
3.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை… செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

ஆக… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எப்படிப் பெறுவது…?

சிறு கல்லாக இருந்தால் ஒரு மனிதன் அதைத் தூக்கி விடலாம். அதுவே பெரிய கல்லாக இருந்தால் பலரும் சேர்ந்தால் தான் அதைத் தூக்க முடியும். அதே போன்று ஒரு நூல் அது வலு குறைவாக இருப்பினும்… பல நூல்களை ஒருங்கிணைத்துக் கயிறாகத் திரிக்கும் பொழுது… எடை கூடிய பொருளையும் அதை வைத்துத் தூக்க முடிகின்றது.

அதைப் போன்று தான் “கூட்டுத் தியானங்களின் மூலம்”
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை அனைவருக்குள்ளும் தூண்டச் செய்து
2.அந்த உணர்வால் உந்தித் தியானிக்கும் போது
3.காற்றிலே படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை நம் உடலின் அருகே (நம்மிடம்) கொண்டு வர முடியும்.

ஆலயங்களிலே தேரை வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருங்கிணைந்த நினைவுடன் இழுத்தால் தான் அந்தத் தேர் எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே… ஒருவர் கிழக்கே… ஒருவர் மேற்கே… ஒருவர் வடக்கு… என்று அந்த வடத்தினைப் பிடித்து இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது

ஆகையினால்… அந்த மகரிஷிகளின் நினைவலைகளை நீங்கள் முன் வைத்து… அனைவரையும் ஒருங்கிணைத்த நிலைகள் கொண்டு… அந்தச் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணும்படி சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்… அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்… தெய்வ குணங்கள் அங்கே வளம் பெற வேண்டும் என்று உங்களை நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்து…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது
2.அந்த சக்தியின் துணை கொண்டு நீங்கள் பெற முடிகின்றது… அதைக் கவர முடிகிறது.

டி.வி..க்களுக்கு “ஆண்டனாவும்” அதற்கென்று சக்தி வாய்ந்த சில நுண்ணியக் கருவிகளையும் பொருத்தி இருப்பார்கள். ஆண்டனா அதனின் துணை கொண்டு தனக்கு முன் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அலைவரிசைகளைக் கவர்கின்றது.

கவர்ந்து… நிசப்தமான நிலைகள் சீராகத் திரைப்படங்களைக் காட்டுவதும்… ஒருமித்த நிலை கொண்டு இசையோ மற்ற எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குச் சீராக எப்போதும் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கிறேன். அப்போது நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்தால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும்
4.உங்கள் உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்
5.அத்தகைய சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இப்படித்தான் நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அதைப் போன்று தான் நீங்களும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.