ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2024

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ குற்றம் குறைகளைப் பார்க்கின்றோம்… எத்தனையோ தீமைகளைக் கேட்டுணர்கின்றோம். அவை எல்லாம் தீய வினைகளாக நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் பிறர் செய்யும் தவறான உணர்வுகள்… சாப வினைகளாக வருவதை… நாம் உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் அது புகுந்து விடுகிறது.

அதே சமயத்தில் ஒருவன் செய்யும் பாவச் செயல்களை உற்று நோக்கும் போது அந்தப் பாவ வினை நமக்குள் வந்துவிடுகிறது. சாப வினையும் பாவ வினையும் மிகவும் கடினமானது

காரணம் எத்தகைய தொழில் செய்தாலும்
1.பிறரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது பழகாமல் இருக்க முடியாது ரோட்டிலே நாம் செல்லாமல் இருக்க முடியாது.
2.பிறர்படும் துயரத்தையும் சாபமிடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்தாலும்
3.அது நமக்குள் புகுந்து சாப வினைகளாக விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் விஷமான பொருளைக் கையில் எடுத்து வேலை செய்த பின் உடனே தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவில்லை என்றால் விஷம் நமக்குள் வந்து உடலைச் செயலற்றதாக்கிவிடும்.

அதே போல் ஒரு விஷ வித்தாக இருந்தாலும் மண்ணிலே விழுந்து விட்டால் அது முளைக்கத்தான் செய்யும். விஷ வித்து என்று அதைப் பிடுங்கி எறிந்தாலும் மறு பக்கம் விழுந்தால் அது அதனின் நஞ்சின் தன்மை இயக்கத்தான் செய்யும்.

ஆகவே நம்மை அறியாது சேரும் தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை அகற்ற வேண்டும். நமது குருநாதர் இத்தகைய வினைகளை எல்லாம் நீக்கும் ஆற்றல்களை…
1.மகரிஷிகள் எவ்வாறு தனக்குள் கற்றுணர்ந்தார்கள்…?
2.தீய வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
3.சாப வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
4.பாவ வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
5.தீமைகளை நீக்கும் உணர்வுகளை எவ்வாறு சேர்த்துக் கொண்டார்கள்…?
6.அது எவ்வாறு அவருக்குள் விளைந்தது…?
7.அதன் துணை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…? என்ற உண்மையை எனக்கு உணர்த்தினார்.

அதை நீங்களும் பெற முடியும் அவர் காட்டிய மார்க்கத்தினைத் தான் உங்களுக்கும் இப்போது உபதேசிக்கின்றோம். இந்த உணர்வின் ஆற்றலை நல்வினையாகப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

பதிவு செய்ததை ஓங்கி எண்ணும் பொழுது தீய வினைகளை அகற்றுவதும் பாவினைகளைப் போக்குவதும் உங்களால் முடியும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்… என்னை அறியாத வந்த தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்குவேன்…! என்ற உறுதி கொள்ளுங்கள்.

இதைச் செயல்படுத்தினால் அந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.