ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2024

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் போக வேண்டும் என்று தனிப்பட்ட நிலையிலிருந்து சொல்லாதீர்கள். குடும்பத்தில் உள்ள பத்து பேர் சேர்ந்து இணைந்து அதைச் செயல்படுத்துங்கள். காரணம்…
1.சிலர் துர்மரணம் அடைந்திருக்கலாம் அல்லது மிகவும் கடினமான நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
2.அவருடைய உணர்வின் தன்மை நம்முடைய உடல்களில் உண்டு.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும் என்று எண்ணினால்
4.பாலிலே நஞ்சினை விட்டு அதிலே பாதாமைப் போட்டாலும் அது செயலற்றதாக மாறுவது போல்
5.அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்….!

அதைப் போன்று இல்லாதபடி குடும்பத்தில் கூட்டாக அமர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி “சப்தரிஷி மண்டல உணர்வுகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…”

அதற்குப் பின் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் ஒருங்கிணைந்து சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் தியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு இருபது பேரை அழைத்துக் கூட்டுத் தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பிறவா நிலை பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் விண் சென்று விடுகிறார்கள். உடல் பெறும் உணர்வுகள் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலிலே (கங்கை) பட்ட பின் அது கருகி விடுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக ஒளியாக நிலைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை விண் செலுத்திய பின் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த நேரங்களில் எல்லாம் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற முடியும்…. அந்த நினைவாற்றலை நாம் பெருக்க முடியும். இடையூறுகளை அகற்றிட முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் நினைவாற்றல் பெருகப் பெருக… இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் நாமும் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகள் அங்கே கறுக்கப்படுகின்றது.

அதன் துணை கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது அந்த ஆற்றலை நாம் எளிதில் பெற முடியும். அனைவருமே இந்தத் தகுதி பெற முடியும்.

இதை எல்லாம் உங்களுக்குப் பயிற்சியாகத் தான் கொடுக்கின்றோம்… யாரும் செய்வதில்லை.

காசைக் கொடுத்துப் பணத்தை செலவழித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்றால்… எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கே காத்திருந்து அதைப் பெறுகின்றார்கள்.

1.நீங்கள் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று குரு அருளைப் பாய்ச்சி
2.உங்கள் முன்னோர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுத்தால்
3.எங்களுக்கு நேரமில்லை இதைச் செய்வதற்கு எங்களால் முடியவில்லை என்று சொல்லி விடுகின்றார்கள்.

மணிக்கணக்கில் காத்திருந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் காசையும் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எளிமையாக யாம் (ஞானகுரு) சொன்னாலும் அதைக் கேட்பதில்லை. இது போன்ற நிலை இல்லாதபடி உங்களை நீங்கள் நம்பி இதைச் செய்து பழக வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்துவது மிகவும் முக்கியமானது.