ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2024

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் - காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!