ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2024

“உலகைக் காத்திடும் கடவுள்களாக” நாம் வளர்ச்சி பெற வேண்டும்

பிறவியில்லா நிலை அடையும் தகுதியை இப்போது இருக்கும் இந்த உடலில் இருந்து நாம் உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது...? என்று நமக்குத் தெரியாது...!

புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்...
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.

அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே “பல கோடி ஆண்டுகள்” வாழும் நிலை வரும்.

இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.

1.எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு
2.எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு
3.இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து
4.நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் இதைக் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.

ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்... “இந்த மனித உடலிலிருந்தே...!”

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.

நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக... உருவாக்கும் கடவுளாக... ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்...!

ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.

இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்... “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்...!”

ஒளியின் சரீரம் பெற்றாலும்… ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில்… ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.

அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்… அவர்கள் தனித்து வாழவில்லை.

அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!