ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2024

மனிதனின் கீழ் நோக்கிய ஈர்ப்பு நிலையும்… “ஞானிகளின் மேல் நோக்கிய ஈர்ப்பு நிலையும்…”

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்...?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து... தெளிந்ததை... ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்...!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக... அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்...!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே… மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது... கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து... சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக...”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது...!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்... ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்... வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே...!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்...!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்...!”

1.அன்பு சித்தர்களும்... அன்பு மகரிஷிகளும்... அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்...!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது...?