ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2024

உயிருடன் நாம் உரையாடுகின்றோமா…?

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே மௌனம்.

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே… சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல.

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”