ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 1, 2024

“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று… மற்றொன்றுக்கு இரையாகி வேதனைப்பட்டு… நரகலோகத்தை அனுபவித்துத் தான் நாம் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
1.சொர்க்கபூமியாக மனித உடலை வளர்த்து… சொர்க்கலோகமாக உருவாக்கி உள்ளது உயிர்
2.சொர்க்கவாசலாக அமைந்திருக்கும் உயிரின் துணை கொண்டு தான் நாம் “என்றும் சொர்க்கலோகமாக வாழ முடியும்…!”

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் சொர்க்கலோகத்தை அடைந்தது. ஆகவே இந்தச் சொர்க்க பூமியை நாம் சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை மாற்றி அமைத்தலே… (அடுத்து) “பிறவி இல்லாத நிலை அடைதல்” என்பது. நமது சாஸ்திரங்களும் வேதங்களும் இதைத் தான் தெளிவாகக் கூறுகின்றது.
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னால் உங்களுக்கு இது விளையாட்டாகத் தெரியலாம்.
2.ஆனால் எமது உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகிவிடும்.
3.அது உங்களை ஞானிகளாக உருவாக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது “நஞ்சை முறித்திடும் உணர்வுகள்” அகஸ்தியன் உடலிலே விளைந்தது.
1.அவன் பார்வையிலே படும் ஒவ்வொன்றும்… அது எத்தகைய நஞ்சாக இருந்தாலும் ஒடுங்கி
2.நஞ்சை முறித்திடும் அணுக்களாக அவனுக்குள் விளைகின்றது.

சூரியனை அவன் உற்றுப் பார்த்தாலும்… அதில் நஞ்சின் கடுமை இருப்பினும் எதிர்மறையான நிலைகள் அது உமிழ்த்தும் அல்ட்ரா வயலட் என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
1.அந்தக் கடும் நஞ்சினை இவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் தன்மை இவன் உடல் உறுப்புக்களைப் பாதிப்பதில்லை.
2.ஆனால் “உணர்வின் ஒளிச் சுடர்கள்” கதிரியக்கப் பொறியாக நட்சத்திரங்கள் உமிழ்த்துவது போன்று இவனில் விளைகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்களை கண் கொண்டு அவன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது… இவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.அந்த விஷத்தை ஒடுக்கி… விஷத்தை ஏற்று… தனக்குள் அதையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலையும்
2.அதன் அறிவாக இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுகின்றான் அகஸ்தியன்.
3.அவனுக்குள் ஒளியான அணுக்களாக விளைந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்சத்தின் சக்தி துருவத்தின் வழியில் பூமிக்குள் வந்து தாவரங்களாக எப்படி உருவாகின்றது…? என்று… அந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்று நோக்கி அதனின் உண்மையின் உணர்வை அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

இப்படி அறிந்து கொண்ட பின்… அதன் வழி வரும் நஞ்சினை முறித்திடும் உணர்வும்… தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றிடும் தன்மையும் அவனுக்குள் வருகின்றது.

அவனின்று விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
1.அதனை யாம் நுகர்ந்து உங்களுக்கு இப்போது வெளிப்படுத்த முடிகின்றது.
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய உணர்வுகள் (அவர் கற்றுணர்ந்த உணர்வுகள்) அவர் அதை வெளியிடும் பொழுது
3.அவரின் துணை கொண்டு அவர் ஊட்டிய உணர்வு கொண்டு அதை நுகர்ந்து… அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறிய முடிகின்றது.
4.அதுவே எனக்குள் அணுக்களாக விளைகின்றது.

நீங்கள் அதை இப்போது நுகரப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் அணுவாக மாற்றும். அந்த உணர்வின் சக்தியை “உணவாக” ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் பொழுது
1.அந்த உணர்வுக்கொப்பச் சிந்தித்து செயல்படும் திறனும்
2.தீமைகளை அகற்றிடும் ஆற்றலும் நீங்கள் பெறுவீர்கள்.

அதற்கே அடிக்கடி உங்களுக்குள் இதைப் பதிவு செய்வது

நீங்கள் வளர நான் வளர முடிகின்றது. நீங்கள் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த உண்மையின் உணர்வை நுகரப்படும் பொழுது எனக்குள்ளும் அது விளைகின்றது.

உணர்வின் ஒளி அலைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நீங்கள் நுகர்ந்தறியும் பொழுது உங்கள் உயிர் அதை அணுவாக மாற்றுகின்றது.
1.அணுக்களாக ஆன பின் தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.அதை நுகரும் பருவம் வரும் பொழுது “அந்த ஞானத்தின் தன்மை இயக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்…”

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.