ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2019

மற்றவர்களின் நோய்களை நீக்கும் தியானப் பயிற்சி


கேள்வி:-
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தியானிக்கும் பொழுது எவ்வளவு நேரம் வேண்ட வேண்டும்...? அருகில் இருக்க வேண்டுமா...? அல்லது அறைக்கு வெளியே இருந்தாலும் பரவாயில்லையா...?

பதில்:-
உடல் நலம் பாதிக்கப்பட்டவர் குடும்பத்திலுள்ளவரோ நம் நெருங்கிய உறவினரோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். வெளி ஊரிலோ அல்லது மருத்துவமனையிலோ படுத்திருக்கிறார்… நம்மால் அவரைப் பார்க்க முடியவில்லை… அவர் குடும்பத்தினர் நம்மிடம் சொல்கிறார்கள் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்...?

செய்தியைக் கேள்விப்பட்டவுடன் முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தி அந்த வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பிற்பாடு நோயாளியின் உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவருடைய நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் நலமாக வேண்டும்...!” என்று முதலிலேயே தியானிக்கக் கூடாது. அருள் சக்தியை எடுத்துத் தியானித்து விட்டுத்தான் செய்ய வேண்டும். (ஏனென்றால் பாசத்தால் எண்ணினால் அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வந்துவிடும்)

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்,
4.அவர் உடலில் உள்ள நோய்கள் (அது எந்த நோயோ) நீங்க வேண்டும்
5.அவர் உடல் நலம் பெற வேண்டும்
6.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் என்று
7.அதே எண்ணத்தில் தியானம் செய்ய வேண்டும்.

எவ்வளவு நேரம் தியானிக்க வேண்டும் என்று கேட்பதை விட அவர் உடல் நலமாகும் வரை திரும்பத் திரும்ப மேலே சொன்ன முறைப்படி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
1.இதை எங்கிருந்தாலும் செய்யலாம்.
2.வெளி நாட்டிலிருந்தாலும் கூட அங்கிருந்து உணர்வைப் பாய்ச்சி மாற்றி அமைக்க முடியும்.

அதே சமயத்தில் முடிந்தால் எல்லோருமாகச் சேர்ந்து கூட்டுத் தியானம் இருந்து அந்த மகரிஷிகளின் உணர்வை எடுக்க வேண்டும். அவர் குடும்பத்தாரையும் கலக்கச் செய்து (அத்தகைய சந்தர்ப்பம் இருந்தால்) அந்த உணர்வை எடுக்கச் செய்ய வேண்டும். எடுத்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அவருக்குப் பாய்ச்சுதல் வேண்டும். கூடுமான வரை நோயிலிருந்து சீக்கிரம் விடுபடச் முடியும்.

குறிப்பு:-
நோயுற்றவர் நடக்கும் நிலையில் இருந்தாலோ அல்லது நம் சொல்லைக் கேட்பவராக இருந்தால் அவரைச் சிறிது நேரம் (ஐந்து அல்லது பத்து நிமிடம்) எழுந்து நிற்கச் சொல்லி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று ஏங்கி இருக்கும்படி சொல்லுங்கள்.

மற்றவர்கள் தியானத்தில் இருந்து மகரிஷிகளின் அருள் அவர் உடலில் படர வேண்டும். அவர் உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும், அவர் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும், அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது அவரின் உடலில் ஒரு விதமான “கரண்ட்…!” பாய்வது போல் இருக்கும். அப்போது அவர் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
1.அவரால் முடியாததை நீங்கள் எல்லோரும் சேர்ந்து சொல்லி
2அவரின் நோய்களை இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்
3..இதில் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.

மகரிஷிகளின் அருளை அப்படி இணைக்கப் போகும் போது மற்றவர்களும் ஏங்கிப் பெற்றார்கள் என்றால் நாம் பாய்ச்சும் உணர்வுகள் அங்கே அவர்களின் நோயை நீக்க உதவும்.

ஆனால் சில நோய்களுக்கு உடனடியாக மருந்து கொடுக்க வேண்டியதிருக்கின்றது. மருத்துவர்களிடம் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் மருந்து உங்களுக்கு வேலை செய்து நன்றாக ஆகும்…! என்று சொல்லலாம்.
2.விரைவில் நல்லதாக்கவும் உதவும்.

https://wp.me/p3UBkg-1tH (நோய் நீக்கும் உபாயங்கள் பற்றிய கருத்துக்களுக்கு இந்த லிங்கை உபயோகிக்கவும்)