ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2019

நாணயஸ்தன் என்பவன் யார்...?


1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாம் ஒன்றாக...
4.ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் இருக்க வேண்டும்.
5.ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்...!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்...! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல உன் எண்ணம் வேறல்ல உன் சொல் வேறல்ல உன் செயல் வேறல்ல எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன். வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன், உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல. எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது. சுற்றி வரும் காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது. பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்... செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று!