ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 19, 2019

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை எப்படி ஊட்ட வேண்டும்...?


தியான வழியில் அன்பர்கள் இருப்பது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது அதிலே சில கஷ்டங்கள் வந்து விட்டது என்றால்
1.இவ்வளவு நாள் தியானம் இருந்து நீ என்னத்தைப் பார்த்தாய்?  என்று
2.அடுத்தவர்கள் நம்மிடம் உணர்ச்சியைத் தூண்டும்படி சொன்னால் போதும்.

அந்த உணர்வை அப்படியே எடுத்துக் கொண்ட பின்...
1.அட.. ஆமாம்... என்ன வந்தது...?
2.தியானம் செய்து ஒன்றும் கிடைக்கவில்லையே...! என்று
3.அடுத்தவர்கள் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
4.அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை.

யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவாக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் தீமைகள் எப்படி இயங்குகிறது...? இதை எப்படி மாற்ற வேண்டும்..! என்று நீங்கள் திருப்பிச் சொல்லிப் பாருங்கள். (செய்து பாருங்கள்)
1.இந்த உணர்வு நமக்குள் நல்லதை வளர்க்கச் செய்யும்.
2.அடுத்தவர்கள் உணர்வை மாற்றலாம்.

ஆனால் நீங்கள் சோர்வடைந்து உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் வந்து பற்ற வைத்தால் தீ அது பாட்டுக்க கிளம்பிவிடும். குறைகளைப் பேசிக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்...? தீமைகளின் இயக்கம் தான் அதிகமாகும்.

உதாரணமாக நீங்கள் நல்ல விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாலும் கூட ஒருவர் வந்து நல்லதைச் சொல்லாதபடி “இது அப்படி... அது இப்படி...! அவன் இப்படியே தவறு செய்கிறான்...!” என்ற வகையில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் நல்லது காணாமல் போய்விடும்.

அவர் சொன்ன உணர்வு உங்களை இயக்கி அந்த விஷத்தின் இயக்கமாகத்தான் வரும். ஏனென்றால் அதற்கு வல்லமை அதிகம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தை நீங்கள் மறக்கக் கூடாது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.காலை நான்கிலிருந்து ஆறுக்குள் எடுப்பதே துருவ தியானம்.
3.காலையில் கண் விழித்ததுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து
4.நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் கை தவறி ஒரு பொருளைக் கீழே விட்டு விடுகிறோம்.... உடைந்து விடுகிறது...!

நம்முடைய மேலதிகாரி ஏதாவது நினைப்பார்கள் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறைக்கத் துணிவோம். மறைக்க முயற்சிக்கும் போது நம்மை முதலில் குற்றவாளியாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.

ஆனால் அதற்குப் பதிலாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரியிடம் இந்த மாதிரிச் செய்தேன். என் கை தவறி விழுந்து விட்டது 
1.இன்னென்ன மாதிரியான சூழ்நிலையில் தான்
2.இந்தத் தவறு ஏற்பட்டது என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.

அதே சமயத்தில் தவறி விழுந்து விட்டது...! இருந்தாலும் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ...? என்று தப்பை மறைக்கும் உணர்வு கொண்டு உடைந்ததைப் பற்றி சொல்லப் போனால் என்ன ஆகும்..?

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொல்வது போல் நம்முடைய எண்ணமெல்லாம் அந்தச் சந்தேக உணர்வு கொண்டு மேலதிகாரியிடம் பயமானவுடனே
1.நாம் தப்புப் பண்ணி இருக்கிறோம் என்ற நம் உணர்வே அங்கே வேலை செய்யும்.
2.அது நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கும்.
3.இதைப் போன்ற நிலைகளை சில நேரங்களில் நீங்கள் அனுபவமாக நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

அதே போல் நம்முடைய குழந்தையே ஒரு தவறு செய்கிறான். சுட்டித்தனம் செய்து எதையாவது உடைத்துவிட்டான் என்றால் உடனே நம்மை அறியாது கோபம் வருகிறது.

எவ்வளவு தான் செல்லமாக குழந்தையை வளர்த்தாலும் கூடக் குறும்புத்தனம் செய்தவுடனே அந்த உணர்வு நம்மை எதிர்த்துத் தாக்கும். அவனை உதைத்தால் தான் என்ன...? என்று உடனே அந்த வேக உணர்ச்சி வரும்.

(உடனே) நம் எண்ணத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா...! என்று ஒரு நிமிடத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கலந்து
2.அவனுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நீங்கள் உதைத்துப் பாருங்கள்.
3.ஆனால் உதைக்க வராது...!

அவனிடம் இந்த உணர்வைச் சொல்லி நீ தவறு செய்ததற்கு நான் உன்னை அடிக்க வந்தேன் அல்லவா...! என்று இந்தப் பயத்தை ஊட்டி நீ தப்பு செய்யாமல் இருந்து நல்லவனாக வர வேண்டும் இந்த உணர்வைக் கொடுத்துப் பாருங்கள்.

நீ இனிமேல் நல்லவனாக வா. இந்த இந்தச் செயல்களை நீ இப்படிச் செய்தாய் என்றால் அது குற்றமாகத்தான் வரும் என்று சொல்லிவிட்டு அவன் குற்ற இயல்புகளிலிருந்து மீட்டுவதற்கு நாம் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.அப்போது அந்த பயத்தால் அவன் நல்ல உணர்வை நுகரும் வாய்ப்பாகின்றது
2.நாம் சொன்ன நல்ல உணர்வு அவனுக்குள் புகுந்து நன்மையைச் செய்யும்.
3.இப்படி... நாம் தப்பு செய்வதற்கு அந்த இடத்தில் பயத்தைக் கொடுக்க வேண்டும்.
4.தப்பு செய்ததற்குப் பயத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தைரியம் வரும்.
(இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது)

“ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி என்று நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று குழந்தை குறும்புத்தனம் செய்யப் போகும் போது அதை எடுத்து நாமும் தணித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் இருந்தாலும் கூடத் தவறு செய்யும் பொழுது கோபம் வரத் தான் செய்யும். ஏனென்றால் அந்த உணர்ச்சி தூண்டவில்லை என்றால் நாம் அதை அறிய முடியாது.
1.ஆனால் குற்றத்தை அறியும் பொழுது அதைச் சொல்லும் பருவத்தில்
2.நல்லதாகச் சொன்னால் அவனைத் திருத்த முடியும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதை நுகரப்போகும் போது அதை அடக்கி விடுகின்றது. ஞானிகளின் உணர்வின் அறிவாக நாம் சொல்லப்போகும் போது அவனுக்கு அந்த தெளிவாக்கும் உணர்வை ஊட்ட முடியும்.

உப்பு கைப்பாக இருக்கிறது. தனியாகச் சாப்பிட முடியுமா...? முடியாது. ஆனால் குழம்புடன் சேர்க்கும் போது சுவையாக வந்து விடுகிறது.

அதைப் போல் தான் இந்த வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளுடன் (எதுவாக இருந்தாலும்) அந்த அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துச் சுவை மிக்கதாக உருவாக்க வேண்டும். இது தான் கார்த்திகேயா.

பாதுகாப்பான உணர்வுகளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மையை எடுத்து இப்படிச் சொன்னோம் என்றால் இந்த எண்ணம் மற்றவரை நிச்சயம் பாதுகாக்கும்.

“பிரம்மாவைச் சிறைபிடித்தான்...!” முருகன் என்கிற பொழுது ஆறாவது அறிவின் துணை கொண்டு பாதுகாக்கும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் உருவாக்கி அத்தகைய சொல்லாகச் சொல்லப்படப்போகும் போது அந்த உணர்ச்சிகள் அது தான் கூர்மை.

அதாவது அடி பெருத்து நுனி சிறுத்து இருக்க வேண்டும் – “வேலாயுதம்...!” அந்தக் கூர்மையின் தன்மைகள் கொண்டு தீமைகளைப் பிளக்கும் தன்மையாக அந்தச் சொல்லாக வரும் என்பதையே வேலாயுதம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஒரு உருவத்தைக் காட்டி அருவத்தின் செயலை நுகர்ந்து நமக்குள்  அருவத்திற்குள் இருக்கும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறுவதைத்தான் ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.