ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2019

காலையில் கண் விழித்ததுமே நாம் செய்ய வேண்டியது என்ன...?


மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பலருக்கும் நாம் பல நன்மைகளைச் செய்கிறோம்.  நன்மைகள் செய்வதைக் கண்டு நாம் மகிழவும் செய்கின்றோம். இருந்தாலும் நம்மால் நன்மைகள் பெற்றவரோ சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார்.

அல்லது வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்கின்றார் அல்லது வேதனைப்படும்படி ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

வேதனை என்பது விஷம். விஷத்தை உட்கொண்டால்
1.நம்மை எப்படி மயங்கச் செய்கின்றதோ
2.இருளடையச் செய்கின்றதோ
3.சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்கின்றதோ அதைப் போல
4.வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் நம் சிந்தனை குறைகின்றது.
5.அடுத்தாற்போல் நம் சொல்லும் நல்ல சொல்லாக வராது.

நல்ல சொல் மறைந்தபின் எவ்வளவு தான் மற்றவர்களுக்கு  உபதேசம் கொடுத்தாலும் நல்ல வழியைச் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலிலே விஷம் பட்டபின்... விஷத்தை மீண்டும் பாலிலே  சேர்க்கப்படும் போது விஷத்தின் தன்மையே கூடும்.
1.ஆனால் விஷத்தின் தன்மை கூட்டினாலும்
2.நல்ல பாலை அதற்குள் அதிகமாகக் கூட்டும் போது தான் அந்த விஷத்தின் தன்மை குறையும்.

சாதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ல பால் எல்லாமே பாழாகி விடுகின்றது. விஷத்தின் தன்மை பாலை ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

அதற்குள் பல ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றினால் அதற்குள் விஷம் சிறுத்து விடுகிறது. அப்போது விஷம் சிறுத்து விட்டால் பாலிற்கு வீரிய சக்தி கொடுக்கின்றது.
1.அதாவது அந்த விஷம் பாலிற்கு மிகவும் வீரிய சக்திகளைக்  கொடுக்கிறது.
2.அது போல பல ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் வேதனைப்பட்ட உணர்வை மாற்ற முடியும்.

அது வரையிலும் நம்மால் அந்த வேதனையைத் தாங்க முடியுமா...? முடியாது. அதற்குண்டான மனம் இல்லை. வேதனையே ஆக்கிரமிப்பு சக்தியாக மாறுகிறது.

அப்படிக் கடுமையான வேதனைப்படும் நேரங்களில் நம் கண்களைப் பார்த்தோம் என்றால் கரு நீலமாகத் தெரியும். ஒளி மங்கியே தெரியும். அத்தகைய வேதனையான நேரங்களில்
1.ஒரு எழுத்தைப் பார்த்தாலும் அந்த எழுத்து சீராகத் தெரியாது.
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்பு தப்பாகப் படிக்க வேண்டி வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது...?

காலையில் கண் விழித்ததுமே “ஈஸ்வரா...!” என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தத் துருவ தியானத்தை எடுத்து அந்தச் சக்தியை நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் இதைச் செய்ய வேண்டும்.

ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தோம். அவர் தவறான நிலைகள் செயல்படுத்தும் போது அதைக் கண்டு நாம் வேதனை கொள்கிறோம். சந்தர்ப்பம் நாம் நுகரும் உணர்வுகள் வேதனையை உருவாக்கும் அணுவாக உருவாகி விடுகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்
1.அவருடைய தவறான செயலைப் பார்த்தவுடனே
2.காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்திப் பிரகாரம்
3.”ஈஸ்வரா...” என்று இடைமறித்து நம் உயிருடன் ஒன்றி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.அந்த உணர்வினைக் கொஞ்ச நேரம் நம் உடலுக்குள் ஈர்த்திட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று அந்த நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்திக் கொண்ட பின் யார் நம்மை வேதனைப்படும்படி செய்தார்களோ.. துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்
1.அவர்களுக்குள் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலை பெற வேண்டும்
3.அவர்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
4.அவரைப் பற்றி நாம் எண்ணி வேதனைப்பட்ட உணர்வை இவ்வழியில் நமக்குள் இணைத்து
5.அந்தப் பேரருள் பேரொளியின் அணுவாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு நாம் எண்ணூவது அனைத்தும் ஓ...ம் நமச்சிவாய ஓ...ம் நமச்சிவாய என்று நமது உயிர் ஓ...! என்று நம் உடலுக்குள் ஜீவ அணுவாக ஒளியாக மாற்றும்.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் எந்த வேதனை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த விஷமான உணர்வை முறித்து ஒளியாக நாம் மாற்றிட முடியும்.

மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியை நிச்சயம் பெற முடியும்.