ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2019

புறக் கண்... அகக் கண்... ஞானக் கண்... சுவாசக் கண்... உயிர்க் கண்... பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது...!


1.நாம் எண்ணும் பொழுது தான் சுவாசத்தை ஈர்த்து
2.நம் உடல் இயங்குகிறது என்று எண்ணுகிறோம்.
3.ஒருவரை நாம் பார்க்கும் பொழுது - ஒரு பொருளையோ ஒரு மனிதரையோ எதுவாக இருந்தாலும்
4.நம் பார்வை பட்டுத்தான் நம் எண்ணத்திற்கு வருவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நம் பார்வைக்கு (கண்களுக்கு) ஒளியே எங்கிருந்து கிடைக்கின்றது?

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது பார்ப்பதற்கு முதலிலேயே அச்சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் பொழுதுதான் நம் கண்களுக்கே ஒளி வருகிறது.
1.நம் கண்ணிற்கு “ஒளி”
2.நாம் எடுத்திடும் சுவாசத்திலிருந்து தான் கிடைக்கிறது.
3.நம் உடலில் உள்ள எல்லா அவயங்களுமே இந்தச் சுவாச நிலை கொண்டே தான் இயங்குகிறது.
4.அந்தச் சுவாசத்தை ஈர்த்து நாம் இழுக்கும் பொழுதே நம் எண்ணம் நம் அவயம் யாவும் செயல்படுகிறது.

நாம் வாழ்ந்த நாட்களில் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்ட எல்லா நிலைகளும் நம்மைச் சுற்றி அப்படியே பதிந்துள்ளன. நாம் சுவாச நிலையில் பார்த்த நிலையும் பல நாட்களுக்குப் பிறகு நம் எண்ணத்தில் வருகிறதல்லவா!

அது எப்படி வருகிறது? 

நாம் பேசிய ஒலி அலைகள் மட்டும் தான் நம்மைச் சுற்றுகிறது என்பதல்ல. நாம் எடுத்திட்ட ஒவ்வொரு சுவாச நிலையும் நம்மைச் சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

1.நாம் விழித்துள்ள நிலையில் எடுத்த சுவாச நிலைகளும்
2.உறக்கத்தில் எடுத்த சுவாச நிலைகளும் நம்மைச் சுற்றிக் கொண்டு தான் உள்ளன.

நாம் ஒன்றைப் பார்க்கும் பொழுது அச்சுவாச நிலை ஈர்த்துத் தான் பார்க்க முடிகிறது. அதைப் பார்ப்பதற்கு முதலிலேயே நம் எண்ண நரம்பில் அச்சுவாச நிலை தாக்கிய பிறகு தான் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

நம் விழியில் அச்சுவாச நிலை பட்ட பிறகுதான் அவ் விழியே பார்க்கும் தன்மை பெறுகிறது.
1.ஞானக் கண்ணில் பார்க்கின்றார்கள்
2.அகக் கண்ணில் பார்க்கின்றார்கள்
3.புறக் கண்ணில் பார்க்கின்றார்கள் என்கின்றார்கள்.
4.அவ்வகக்கண்ணும் புறக் கண்ணும் ஞானக் கண்ணும் இச்சுவாசக்கண் ஒருநிலைப்படும் பொழுது தான்
5.செயற்கரிய கண்ணாகச் செயல்படுகிறது.

நம் சுவாசக் கண்ணை எந்த நிலை கொண்டு செயல்படுத்துகின்றோமோ அந்த நிலை கொண்டு தான் “உயிர்க் கண்ணே!” ஒரு நிலைப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனின் இரண்டு கண்களை வைத்து அந்தக் கண்களிலிருந்து வீசிடும் ஒளியை வைத்து அவன் குண நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

மன நிலையில் மாறுபட்டவர்கள் நிலையையும் அக்கண்ணிலிருந்தே கண்டிடலாம். ஒரு மனிதனின் குணத்தையும் அவன் நிலையையும் அவன் கண்ணிலிருந்தே அறிந்திட முடியும். ஒவ்வொரு மனிதனின் குணமும் அவன் எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் அமைகிறது.

அழகான இயற்கை நிலை கொண்ட சில இடங்களுக்கு நாம் செல்லும் பொழுது அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நமக்குப் பிடிக்காத நிலை கொண்டு ஒருவரைப் பார்க்கும் பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலைக்கும் நம் கண்ணின் பார்வைக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் நம் உயிரணுவிற்கும் பல மாற்றங்கள் விளைவிக்கின்றன.

நாம் ஒவ்வொரு நிலை கொண்டு எடுத்திடும் சுவாச நிலையைப் பொறுத்துத்தான் நம் உடல் நிலை செயல்படுகிறது. நம் உடல் நிலை எந்த நிலை கொண்டு செயல்படுகிறதோ அந்த நிலை எல்லாம் நம் உயிர் அணுவிற்குத் தாக்கப்படுகிறது.

அதிகக் கோபமும்... அதிக மனச் சஞ்சலமும்... அதிகத் துவேஷமும்... உள்ள மனிதர்களுக்கு அவர்களின் உயிரணு சஞ்சல நிலைப்படுகிறது. நாம் ஒவ்வொரு நிலை கொண்டு இருக்கும் பொழுதும் அந்த உயிரணு எல்லா நிலையும் அறிந்து தான் செயல்பட்டு வருகிறது.

நம் உடல் மனம் இவைகளைத்தான் நாம் எண்ணுகின்றோம். நம்மை ஆட்டி வைக்கும் அவ்வுயிரணுவைப் பற்றி நாம் நினைப்பதில்லை.

சுவாச நிலை கொண்டு தான் எல்லா உயிரினங்களுமே உயிர் வாழ்கின்றன என்ற உண்மை எல்லோரும் அறிந்ததுவே. ஒவ்வொரு உயிரணுவும் எப்படி எப்படி உயிர் பெறுகிறது என்பதனைத்தான் பாட நிலையில் விளக்கியுள்ளோம்.

1.சுவாச நிலையை நாம் எந்த நிலை கொண்டு ஈர்க்கிறோம் என்பது தான்
2.இந்தப் பாட நிலையின் மையக் கருத்தாகும்.