ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2019

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொட்டுக் காண்பித்த அந்தத் துருவ நட்சத்திரத்தை "நாமும் நேரடியாகத் தொடர்பு கொள்வோம்"


1.உங்கள் பொட்டிலே தொட்டுக் காட்டுவதைக் காட்டிலும்
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மைகளை உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்
3.இந்த உபதேசத்தின் வாயிலாக வீரிய உணர்வாக ஊட்டுறோம்.
4.கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களிலும் கலக்கின்றது.

அந்த அருள் உணர்வைப் பெருக்கி இருளிலிருந்து மீட்டி உயிர் என்ற உணர்வின் தன்மை ஆறாவது அறிவு - கார்த்திகேயா அறிந்திடும் உணர்வு ஒளியாகி ஒளியின் அறிவாக நாம் வளரும் பருவத்திற்கு தான் இதைக் கொடுக்கின்றோம்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த அருள் உணர்வுகளை அடிக்கடி கேட்டுப் படித்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
1.நம்மை நாம் அறிய முடியும்.
2.உலக ஞானத்தையும் அறிய முடியும்.
3.வாழ்க்கையில் அறியாது வந்த வேதனைகளை அகற்ற முடியும்.
4.என்றும் பேரொளியாக விண்ணிலே நிலைத்திருக்க முடியும்.

நம்முடைய உணர்வுகள் ஒளியாகும் பொழுது நம் சொல்லும் செயலும் அதை நுகர்வோருக்கும் இருளை அகற்றிடும் நிலையாக வருகின்றது. ஒளியான உணர்வை அவர்களும் உருவாக்க முடியும். ஆகவே ஒவ்வொருவரும் தீமைகளை நீக்கி என்றும் ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார். என்னையும் துருவ நட்சத்திரத்தை உற்றுப் பார்க்கச் சொன்னார்.

1.அகண்ட அண்டத்தை அறிந்துணர்ந்த குருவின் உணர்வுகளையும்
2.அவருக்குள் விளைந்த அவர் கவர்ந்த விண்ணின் ஆற்றல்களையும்
3.அவர் பெற்ற நிலையை என்னையும் (ஞானகுரு) பெறச் செய்தார்.

அவர் காட்டிய அனைத்தையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக ஈசனாக மதிக்கின்றேன். உங்கள் உடலை அந்த ஈசன் அமைத்த ஆலயம் என்று மதிக்கின்றேன். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொடர்பு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்களும் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று அந்த மெய்ப் பொருள் காணும் அந்த உணர்வுகளை வளர்த்து வைத்திருக்கின்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு குருவை எண்ணி அங்கே ஏங்குகின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று நீங்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணும் போது அந்த உயர்ந்த எண்ணங்கள் எனக்கும் கிடைக்கிறது.

ஆகவே அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி அந்தத் துருவ நட்சத்திரமான அந்த உணர்வை உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் இணைந்து அவருடைய  துணையால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்ப்போம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பத் தியானியுங்கள்.

1.சிவ தனுசு என்ற மனித உணர்விற்கு மாற்றும் நிலையை நீக்கிவிட்டு
2.உயிர் என்ற ஒளியின் தன்மை ஆக்க விஷ்ணு தனுசை நம் உடலுக்குள் பாய்ச்சி
3.தீமையை அகற்றிடும் பேரின்ப பெருவாழ்வு வாழும் அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பாய்ச்சுவோம்.
4.பேரருள் உணர்வைப் பெருக்குவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா... ஓம் ஈஸ்வரா குருதேவா... ஓம் ஈஸ்வரா குருதேவா...!