ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2019

திரு அண்ணாமலையில் கிரி வலம் வர வேண்டும் என்று சுற்றி வருவதன் மூலம் என்ன...?

உடலின் உச்சியிலே நம் உயிர் வீற்றிருக்கிறது. நம் உயிரே கடவுளாக உள் நின்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தையும் சதாசிவமாக உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

1.உடலாக மாற்றினாலும் நாம் சுவாசிப்பது ஆன்மாவிலிருந்து தான்.
2.நம்முடைய ஈர்ப்பு வட்டமே ஆன்மாவாகும்.
3.இந்தப் பிறவியிலும் சரி… இதற்கு முன் எடுத்த பிறவிகளிலும் சரி… நாம் எடுத்துக் கொண்ட எண்ணிலடங்காத உணர்வின் அலைகள்
4.உடலைச் சுற்றி அமைந்துள்ள சுழன்று கொண்டிருக்கும் அந்த உணர்வலைகளே நம்முடைய ஈர்ப்பு வட்டம்…! (நம்முடைய காற்று மண்டலம்)

நம்முடைய ஆன்மாவில் நல் உணர்வுகள் அதிகம் இருந்தால் நம்மை அது நல் வழியில் இயக்கி நம் வாழ்க்கை சீராக இருக்கும். நம்மை நலமாக வாழச் செய்யும்.

ஆனால் சந்தர்ப்பவசத்தால் நுகர நேரும் தீமை செய்யும் உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகி விட்டால் அதனுடைய அழுத்தத்தால் நம்மைத் தீமையின் வழிக்கே இயக்கி நமக்குத் துன்பம் தரும் நிலையாக ஆகிவிடும்.

ஆக நம்முடைய ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அதை நாம் சுற்றிப் பார்க்க வேண்டும்.

1.நம் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் உணர்வலைகளை அறிந்திடும் நிலையாக
2.உயிரால் நுகரப்பட்ட உணர்வலைகள் ஆன்மாவாக இருப்பதை அது எது…! எது…? என்று அறியும் நிலையாக
3.நம் ஆன்மாவைத் தூய்மைபடுத்தும் நிலைக்காக
4.திரு அண்ணாமலையைக் கிரி வலம் வர வேண்டும் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அவ்வாறு சுற்றிப் பார்த்த பின் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஆத்ம ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் சக்தியாக நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்ள முடியும்.