ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2019

ஆண்டவன் எப்படி எங்கே இருக்கிறார் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


தாய் தந்தையில்லாமல் குழந்தையில்லை...! நிலம் நீர் இல்லாமல் “தாவர இனங்கள் இல்லை….!” சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் பூமியுமில்லை…! பல மண்டலங்களின் நிலையில்லாமல் சூரியனுமில்லை…!

சூரியனின் நிலை இல்லாமல் பல மண்டலங்களுமில்லை…! சூரியனுக்கே சக்தி தரும் பல கோடிச் சூரியன்கள் இல்லாமல் இயங்காமல் இந்த மண்டலங்கள் சூரியன்கள் எதுவுமே இல்லை…!

இந்த மண்டலங்களின் தன்மை எதுவும் இல்லாமல் காற்றும் மழையும் ஒளியுமில்லை…! இப்படி இந்த எல்லா நிலைகளையும் ஆட்டிப் படைக்கும் அத் தேவனின் சக்தி ஒன்றே தான்… ஒரே நிலை கொண்டு தனித்து வணங்கிடும் அவ்வாண்டவனின் சக்தி…!
1.அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து இயங்குபவை எல்லாமே
2.எதுவுமே தனித்து இல்லை….
3.ஒன்றை ஒன்று ஒட்டித்தான் எல்லாமே உள்ளன.

ஆனால் இன்றைய மனிதர்களில் சிலரின் நிலை “நான்…!” என்ற ஆணவத்தில் இயங்கி வருகிறது. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டகற்றிடும் அவன் மன நிலையை அச்சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து தான் அவன் பெற வேண்டும்.

ஆண்டவனே இல்லை என்று சொல்லும் யாராக இருந்தாலும் இதைப் படித்து விட்டுப் பதில் சொல்லட்டும்…!

1.இந்த உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது
2.நம் மனதை மட்டும் “நான்…!” என்ற நிலையில் ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?
3.நான் என்ற நிலை கொண்ட மன நிலையை விட்டு அகற்றிடுங்கள்.

இந்தக் கலியின் கடைசி நிலை கொண்டு நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்ற உண்மையை அறிந்து இனி நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்னும் நிலையில் அவ்வாண்டவனை வேண்டி அருள் பெற்று வாழ்ந்திடுங்கள் நல் வாழ்க்கையை.

ஆண்டவனின் சக்தி ஆண்டவனின் சக்தி என்று சொல்லும் பொழுதே ஆண்டவனை ஆண்பாலாகவும் சக்தியினைப் பெண்பாலாகவும் கொண்டு யாம் (ஈஸ்வரபட்டர்) எதையும் தனித்துச் சொல்லவில்லை.

எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து தான் உள்ளது. அந்த ஆண்டவனின் சக்தி நிலை இயங்குவதற்கே இப்பல மண்டலங்கள் இல்லாவிட்டால் பொருளில்லை.

இந்த நிலையில் ஆண்டவன் எங்கப்பா தனித்து நிற்கின்றான்…?

1.நாம் தனியாக இயங்கவில்லை (நம் எண்ணத்தில் தான்…!)
2.அவன் ஒருவன் உள்ளான் என்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
3.அவ்வாண்டவனை மட்டும் தனித்த நிலையில் வணங்கச் செய்தார்கள் ஞானிகள்.

அவ்வாண்டவனின் சக்தியில் தான் எல்லா மண்டலங்களும் எல்லா உயிரினங்களும் உள்ளன.

1.அவ்வாண்டவனே தான் எல்லாமே
2.ஆண்டவன் என்பவன் தனித்து எங்குமில்லை
3.அவ்வாண்டவன் என்பவன் தான் எல்லாமே என்ற உண்மை மட்டும் தனித்து இருக்கிறதப்பா…!

அவ்வாண்டவனின் சக்தியை நீங்கள் எந்த ரூபம் கொண்டும் எந்த நிலை கொண்டும் அவரவர்கள் மன நிலைக்கு உகந்தபடி வணங்கி வாழ்ந்திடுங்கள். நம்முள்ளே உள்ள ஈசனையே நாம் காணும் பாக்கியம் பெற்றிடலாம்.

அந்த ஆண்டவனின் சக்தி நிலையும்… எந்த நிலை கொண்டு இருக்கிறது என்பதனையும் தான் புகட்டியுள்ளோம்.

ஆண்டவன் என்பவன் யாரென்று புரிகின்றதா…?