ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2019

நற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.

அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?

நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயேன் வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.

இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.

அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.

அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?

1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.

பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.

ஆசையின் நிலையும் ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.

ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.

ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.

ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.

ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.

ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!