ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 12, 2019

பல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


சுவை தரும் இயற்கைக் கனிகள் தன்மையில் இனிப்பின் சுவையே ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு உள்ளது.

மிளகாய்க்கும் மிளகிற்கும் வெங்காயத்திற்கும் இஞ்சி போன்றவற்றின் கார குணமானது ஒன்றுக்கொன்று மாறுபட்ட காரம் கொண்டது.

அதே போல் அதை ஒவ்வொன்றையும் உண்ணும் பொழுதும் உடல் நிலைக்கு ஒவ்வொரு நிலையான “உஷ்ண கதியும்” ஏற்படுத்தவல்ல குண நிலையும் அவைகளுக்கு உள்ளது.

புளிப்பு சம்பந்தப்பட்டதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றின் புளிப்புச் சுவையும் அதற்குகந்த உடல் தன்மைக்கு அதனுடைய குணச் செயலும் ஏற்படுகின்றது.

இதைப் போன்றே உணர்வின் எண்ணங்களும்
1.ஒவ்வொரு மனித பிம்பத்தின் உணர்வு எண்ண நிலைக்கொப்பத்தான்
2.அப்பிம்ப உடலில் இருந்து செயல் கொள்ளும் ஆத்ம உணர்வின் சேமித
2.குணச் சக்தியின் அமிலக்கூட்டு உருவாகியுள்ளது.

இந்திய பூமியில் தான் மனித குணங்கள் கொண்ட பல நிலையான விக்கிரகங்களை அமைத்து வணங்குகின்றனர்.

மற்றவர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று ஒரே ஆண்டவனை வணங்கும் பொழுது இங்கே பல நிலையான விக்கிரக ஆராதனையும் மாறு கொண்ட பூஜை முறைகளையும் வழிப்படுத்தியதன் உண்மை நிலை என்ன…?

இது எல்லாம் அன்று ஒவ்வொரு சித்தனாலும் தான் எடுத்த சக்திகளை அந்தந்த மனிதக் கூட்டின் அமில ஈர்ப்பின் நிலைக்கொப்ப ஒன்றின் சக்தியினால் பிறிதொன்றின் வழித் தொடர் கூட்டி வழிப்படுத்தித் தந்த முறை வழியில் வந்தது தான்…!
1.குண நிலைகளின் உருவத்தை உருவகக் கல்லாகச் செதுக்கி வைத்து
2.கல்லின் உருவத்தில் குணங்களையும் அதனின் இயக்கங்களையும் உணர்த்தினான்.

விஞ்ஞான முறைப்படி இன்று பாடநிலைகளைப் பல வகையில் கல்வி கற்பவர்களுக்குக் கொடுப்பது போல் அன்றைய சித்தர்கள் சிற்பங்கள் மூலமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணமாக  உணர்த்தினார்கள்.

1.குண மாற்றத்தின் சக்திதனை எடுத்து
2.அக்குணத்தின் விக்கிரகத்துடன் எண்ணத்தைச் செலுத்தி வணங்கும் நிலையில்
3.எக்குண தெய்வத்தை ஒருவன் வணங்குகின்றானோ
4.அக்குணத்தின் அடிப்படை சக்தியின் உணர்வை அவ்வாத்மாவும் ஏற்று
5.அவ்வழி சக்தித் தொடர் பெற வேண்டிய நிலைக்கொப்பத்தான்
6.பல உருவ வழிபாட்டினை உணர்த்திச் செயல்படுத்தி வந்தனர்.

ஆக சப்தரிஷிகளினால் இன்றளவும் அவ்வழிபாட்டின் தொடர் சுழற்சி வளர்ந்து கொண்டுள்ள உண்மை தான் “பல உருவ வழிபாட்டு முறை எல்லாம்…!”

உருவ வழிபாட்டின் மாறுபட்ட குண நிலை போன்றே மனித பிம்ப உடல் எண்ணத்திலும்… மாறு கொண்ட நற்குணங்களிலும் பல நிலைகள் உண்டு…. தீய குணங்களிலும் பல நிலைகள் உண்டு...!

இதைப் போன்றே சப்தரிஷிகளினால் செயல்படுத்தும் முறையிலும் அவரவர்கள் ஆரம்ப குணத் தன்மையில் அதிகமாகச் சேமித்த எண்ண உணர்வின் விகித நிலையின் வளர்ச்சித் தொடரிலே தான் இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் வழித் தொடர் கொண்ட ஒளி அலையை உணர்வலையாக்கி பல தன்மைகளை மாற்றி மாற்றிச் செயல் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளினால் இந்தப் பூமியில் விதைத்த மனிதக் கருவின் வளர்ச்சியின் தொடரே இன்றைய இக்கலி மாறி கல்கி சுழற்சியில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாறப்படும் இந்த மனிதக் கரு உருவங்களும் மாறு கொண்ட தன்மையில் தான் உருவாகும்.

சப்தரிஷிகளின் சக்தி நிலை கூடக் கூட காலப் போக்கில் தீய நிலைகளை எல்லாம் மாற்றி உயர் சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

1.இந்தத் தொடர் முறை மாற்றத்தின் வழிதனையும்
2.பல குண வழித் தொடர் ரிஷிகளின் தொடர் நிலையையும் நாம் எடுக்கும் ஜெபத் தொடரில்
3.ஒவ்வொருவர் எடுத்த தனித்த உயர் சக்தியின் வழித் தொடர் அலையை ஜெப முறையினால் நாமும் எடுக்க முடியும்.