ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2017

சொந்தத்தின் பந்தத்தால் பாசத்தால் வரும் நிலைகளும் – அருள் உணர்வின் நேசத்தால் வரும் நிலைகளும்

உயர்ந்த குணங்கள் கொண்டு வந்தாலும் “சொந்தம்..,” என்ற நிலைகள் வரும் பொழுது “பந்தம்..,” என்று ஆகி பாசத்தால் வந்தவுடன் குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ சிக்கல்கள் வந்தால் செய்வதறியாது தவிப்போர் உண்டு.

“பாசத்தால்.., இப்படி ஆகிவிட்டதே..,” என்ற நிலைகள் கொண்டு கற்றுணர்ந்த உணர்வை அறிய முடியாது செயல்படுத்த முடியாது அதைத் தவற விடும் நிலை வந்துவிடுகின்றது.

“நேசத்தால்..,” உயர்ந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகள் பெறவேண்டும் என்று எண்ணினால் அந்த நேசம் உயர்வைக் காட்டும். அனைவரையும் நாம் நேசிக்க வேண்டும்.

“எதைக் கொண்டு..,” நேசிக்க வேண்டும்?

“அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அனைவரும் பெறவேண்டும்..,” என்று அந்த நேசத்தைக் கூட்ட வேண்டும். ஆகவே, குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

ஏனென்றால், உங்களுக்கு யாம் “படிப்படியாக.., சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்”. எல்லாம் “பூரணமாகச் சொல்ல வேண்டும்..,” என்றால் காலம் இல்லை.

ஏனென்றால், குருநாதர் எனக்குள் பதிவு செய்த பேருண்மைகள் “எண்ணிலடங்காதது..,” இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் (பிரம்மாண்டத்தின்) உணர்வுகள் பதிவு செய்ததை “எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காக எடுத்துக் கொடுக்கின்றோம்.

ஆக, அந்த நினைவைக் கூட்டும் பொழுது உணர்வை ஒளியாக்கி உணர்வின் தன்மை எண்ணமாக்கி அதனின் நிலைகளைத்தான் செயல்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு ரூபத்திலும் குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த உணர்வின் ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது எனக்குள் உணர்த்தி அந்த உணர்வின் தன்மையை அவரே தான் இங்கே வழி நடத்துகின்றார்.

ஏனென்றால், என்னுள் அவர் இருந்து அல்ல.

“அவர் பதிவு செய்த நாடாவாக..,” (MEMORY DISC) நான் எண்ணும் பொழுது உணர்வுகள் இயக்கப்பட்டு அது பெறப்பட்டு “நீங்கள் பெறவேண்டும்.., என்று அவர் செய்த உணர்வைத் தான்..,” நான் செய்கின்றேன்.

அவருடைய உணர்வுகள் தான் என்னைச் செய்ய வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய அருள் வழிகளில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலுக்கு மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரது உடல்களையும் மகிழச் செய்வோம்.

மகரிஷிகளின் அருள் உணர்வுடன் ஒன்றியே இந்த வாழ்க்கையை வாழ்வோம். என்றும் பேரானந்த நிலைகள் பெற்று பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளுடன் வாழும் நிலையை நாம் உருவாக்குவோம்.

இதைப் படித்துணர்ந்தோர் அனைவருக்கும் அவர்கள் வீட்டில் மகிழ்ச்சி போங்கும் நிலைகளாக உருவாகும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட குரு அருளும் எமது அருளும் உறுதுணையாக இருக்கும்.

மெய் உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம். உலகம் நலம் பெற தவமிருப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற தவமிருப்போம்.