ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2017

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் வேறு வாசல் வழி செல்கிறோம் ஏன்?

நம்முடைய சாஸ்திரங்களில் காட்டப்பட்டது வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல்.

பெருமாள் கோவில் அனைத்திலும் வழக்கமாகப் போகும் பாதையை “விட்டுவிட்டு…, இடைமறித்து.., வேறு வாசல் வழி வந்து.., நாம் அதன் வழி செல்வது – சொர்க்கவாசல்”.

ஆக சாதாரண மனிதனும் இதை அறிந்து கொள்வதற்காக சாஸ்திரப்படி ஆலயங்களில் காட்டப்பட்டது.

அன்றைய தினம் விரதம் இருக்க வேண்டும் என்று காட்டினார்கள். விரதம் என்றால் என்ன? இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அன்றைய தினம் நாம் எண்ணாமல் இருப்பதே விரதம் ஆகும்.

“தீமைகளை எண்ணாமல் இருப்பதே.., விரதம்”. சாஸ்திரம் கூறுகின்றது.

ஆக, தீமைகளை நாம் எண்ணாது அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ளும்படி செய்தார்கள் ஞானிகள். மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரும் ஆற்றலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்கள்.

யாரைப் பார்த்தாலும்.., அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் தெய்வ சக்தியாக அவர்கள் வளர வேண்டும் என்று “இந்த உணர்வுகளை எவர் எடுக்கின்றார்களோ.., இதுதான் சொர்க்க வாசல்” என்பது.

அதனின் உணர்வுகளை எதன் வழி பெறவேண்டும் என்று.., “உயிரைப் புருவ மத்தியை” வைத்துக் காட்டப்பட்டது.

நாம் புறக்கண்ணால் காணுகின்றோம். அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே அகக்கண்ணாகப் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை தான் உடலுக்குள் பரப்பப்படுகின்றது.

அதனின்று நாம் அகக்கண்ணின் நிலைகள் கொண்டு நாம் புறக்கண்ணால் பதிவு செய்த நிலைகள்

இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைப் புறக்கண்ணால் உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். மீண்டும் இதை நினைவாக்கப்படும் பொழுது எப்படி எண்ணுவீர்கள்? நீங்கள் எப்படிச் சிந்திப்பீர்கள்?

சாமி அன்றைக்கு என்ன சொன்னார்..,? என்று உங்களின் நினைவாற்றல் “விண்ணிலே.., மேல் நோக்கித்தான் செல்லும்”.

வியாபார ரீதியில் எடுத்துக் கொண்டால் ஒரு தடவை பதிவாக்கிவிட்டால் இந்த உணர்வின் தன்மை மீண்டும் உங்கள் நினைவின் ஆற்றலை “அன்றைக்கு என்ன சொன்னார்..,?” என்று கீழே பார்க்க மாட்டீர்கள்.

கீழே பார்த்தால் உங்களுக்குக் கவலையும் சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

இதைப் போல இயற்கையின் நியதி கொண்டு உங்களுடைய சிந்தனையின் தன்மையை அந்த உயிரான ஈசனிடம் உங்களை அறியாமல் இயக்கப்படும் பொழுது தான் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் இருந்த நினைவைத் திருப்பி உங்களுக்குள் நினைவாகும்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை “ஈஸ்வரா..,” என்று உயிருடன் (புருவ மத்தியில்) ஒன்றி அந்த அருள் ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை அப்பொழுதே உங்கள் உடலுக்குள் ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அது சேர்ப்பிக்கும்.

அந்த உணர்வுகள் அங்கே உடல்களில் பரவும். அதனதன் உணர்வுகள் அங்கே இயக்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வுகளை அது பெறுகின்றது.

இதைத்தான் சொர்க்கவாசல் என்பது. இது மனிதனால் தான் முடியும்.

புருவ மத்தியிலிருந்து உடலுக்குள் செல்லும் பொழுது அருள் உணர்வுகளை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும்.

சகஜ வாழ்க்கையில் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நாம் சுவாசித்தது உயிரிலே மோதும் பொழுது அந்த உணர்வின் தன்மைகளைத்தான் உயிர் ஜீவ அணுக்களாக உடலுக்குள் மாற்றுகின்றது.

ஆக, நாம் புறக்கண்ணால் பார்த்த அசுத்த உணர்வுகள் இங்கே இருப்பினும் இதன் வழி சுவாசிக்காதபடி இந்த அகக்கண்ணின் வழி கூடிய நினைவு கொண்டு இதனின் காந்தப்புலனைத் தனக்குள் சேர்த்தால் அது பிராணாயாமம்.

மூக்கின் வழி சுவாசிப்பதை இடைமறித்து அருள் மகரிஷிகளின் உணர்வை வலுச்சேர்த்து உயிருடன் ஒன்றி உடலுக்குள் உள்ள அணுக்களுக்குள் பரப்பப்படும் பொழுது இதன் வழி சென்றால் பிராணாயாமம்.

நமக்குள் ஜீவனின் ஜீவ அணுக்களாக உருவாக்கும் அதன் வழி செல்லும் நிலைதான் பிராணாயாமம் என்பது.

ஆகவே, மனிதனின் சிந்திக்கும் ஆறாவது அறிவு கார்த்திகேயா. ஆறாவது அறிவு கொண்டு அவன் புருவ மத்தியை எண்ணும் இந்தப் பாதையை அறிந்து கொண்டவன்.

இதன் வழி தான் அவன் சொர்க்கம் செல்ல வேண்டும்.