ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2017

சொர்க்கத்துக்குப் போகும் “பாதை..,”

அன்பும் பரிவும் பாசமும் கொண்ட நாம் இன்று சாதாரண வாழ்க்கையில் நாம் எப்படி எண்ணுகின்றோம்?

அவர்கள் செல்வச் செழிப்புடன் நன்றாக இருந்தார்கள். எல்லோருக்கும் அவர்கள் பல உபகாரங்களைச் செய்தார்கள். ஆனால், “பாவம்…, இன்று இப்படி வேதனைப்படுகின்றார்கள்”.

அவர்கள் குடும்பமெல்லாம் “இப்படி வேதனைப்படுகின்றது..,” என்று பரிவும் பண்பும் கொண்டு “பயன்படுத்தும் முறையைத் தவறி..,” நாம் பாசத்தால் அவர்கள் படும் வேதனையை நுகரப்படும் பொழுது நம்முள் உள்ள நல்ல குணங்களை இழக்கச் செய்துவிடுகின்றது.

நல்ல குணங்களை விலுவிழக்கச் செய்துவிடுகின்றது. இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்..,? ஏதாவது வழி இருக்கின்றதா..,?

மனிதன் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும் தன்னை அறியாது வரும் பகைமைகளை நீக்குவதற்கும் சந்தர்ப்ப பேதத்தால் நமக்குள் பகைமை உருவாக்கும் அணுக்கள் விளைவதைத் தடைப்படுத்துவதற்கும் பல உபாயங்களைக் கண்டுபிடித்து “ஆலயங்களை அமைத்தார்கள்.., அன்றைய மெய்ஞானிகள்”.

ஆனால், அந்த ஞானிகள் காட்டிய வழியில் இன்று யாராவது ஆலயத்திற்குச் செல்கின்றோமா..,? என்றால் எவரும் இல்லை.

வைகுண்ட ஏகாதசி - சொர்க்க வாசல் அன்று சொர்க்கத்திற்குப் போகும் பாதை என்று விடிய விடிய உட்கார்ந்து கொண்டு பேசுவார்கள்.

எதைப் பேசுவோம் என்றால் அமைதி கொண்டு இருக்கும் பொழுது “அவர் குடும்பத்தில் இப்படி.., இவர் குடும்பத்தில் இப்படி.., இவர்கள் இப்படி இருந்தார்கள்..,” என்று அந்த இரவு முழித்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

ஏனென்றால், சோர்வடையும் பொழுது அந்தச் சோர்வில் கிளம்பும் இத்தகைய உணர்வுகளைப் பேசிக் கொண்டிருப்பதுதான் சொர்க்க வாசல் அன்றைக்கு வேலை.

பெரும்பகுதியானவர்களைப் பார்த்தோம் என்றால் இரவு முழுவதும் அடுத்தவர்களைப் பற்றிய குறைகளை விடிய விடியப் பேசுவார்கள்.

காலையில் சொர்க்க வாசலைத் திறந்தபின் “திபு திபு..,” என்று தள்ளுவார்கள். ஆக, தன்னை மறந்து இவ்வாறு செய்வார்கள்.

ஏனென்றால், அங்கே மோட்சத்திற்குப் போகக்கூடிய.., “பாதை..” திறந்துவிட்டது. தான் முண்டியடித்துக் கொண்டு போய் அங்கே அபிஷேகத்தைச் சாற்றிவிடலாம் என்று செல்வார்கள்.

உடனே ஆண்டவன் மெச்சி.., “எல்லோரையும் தள்ளிவிட்டு..,” என்னை வந்து தரிசிக்க வந்தான் அதனால், அவனுக்கு “அருளைப் பாலிக்கலாம்..,” என்று கடவுள் கொடுப்பான் என்றி இப்படித்தான் நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொண்டு நம்மை அறியாமலே தவறுகள் செய்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

ஒரு மனிதன் துயரப்படுவதைக் கண்டபின் நாம் மகிழ்ச்சி அடையக் கூடாது. அவர்கள் துயரத்திலிருந்து மீள வேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெறவேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுகளை நமக்குள் சேர்த்துவிட்டால் “இந்தப் பாதை..,” நாம் உயர வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

எதன் வழிகளில் இதை எண்ணுகின்றோம்?

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அதன் வழிகளில்தான் எண்ணுகின்றோம். அந்த அருளை முதலில் நாம் எண்ணுகின்றோம். அடுத்துத் துன்பப்படுவோர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அப்பொழுது அவர்கள் துன்பத்தை நாம் நுகர்வதில்லை.

அந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது நாம் யார் யாரெல்லாம் நல்லவராக வேண்டும் என்று எண்ணினோமோ அவர்களும் அதைப் பெறுவார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் எண்ணி அவர்களும் அதைப் பெறவேண்டும். அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணினால்.., “இது. சொர்க்கப்பாதை”.