ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2017

வாலியை இராமன் நேரடியாகத் தாக்கவில்லை... மறைந்திருந்து தான் தாக்கினான்... ஏன்....?

இன்று மக்கள் ஆட்சி என்ற நிலையிலிருந்தாலும் மக்களைக் காப்பதற்கில்லை. அன்றைய அரசர்கள் கடவுள் என்ற நிலையில் மக்களைக் காக்கவே சட்டங்களை இயற்றினார்கள்.

கடவுள் என்று வந்தாலும் இன்று நாம் கடவுளைக் காப்பவர்களாகத்தான் இருக்கின்றோமே தவிர கடவுள் மக்களைக் காப்போராகத் தெரியவில்லை.

“மதத்தின் அடிப்படையில் வகுத்துக் கொண்ட கடவுள்.., எவரும் எல்லை”.

மனிதனுக்குள் உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொண்ட உணர்வின் செயலே “உள் நின்று.., (கட+உள்) கடவுளாக இயக்குகின்றது..,” என்று நமது குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.

மகான்கள் உணர்த்திய நிலைகள் கொண்டு எவரொருவர் தீமைகளை வென்றிடும் உணர்வை நுகர்ந்தனரோ “அது உள் நின்று.., தீமைகளை அகற்றும்” நிலைகள் பெறும்.

தீமைகளை அகற்றிடும் நிலை வரும் பொழுது பண்புடன் அரவணைக்கும் தன்மையே வரும். இதைத்தான் தெளிவாக வான்மீகி மாமகரிஷி இராமாயணத்தில் உணர்த்துகின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்வதற்காக போர் முறைகளைக் காட்டுகின்றார். யார் யார் இந்த வல்லமை கொள்கின்றனரோ “திறமை கொண்டோருக்கே..,” எனது வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்கிறார்.

சீதாவிற்குத் திருமணம் செய்ய இவ்வாறு பறை சாற்றுகின்றனர்.

ஒவ்வொருவரும் படையெடுத்து அந்தச் சீதாவைத் திருமணம் செய்ய முந்தியடித்து வருகின்றார்கள். எல்லோரும் அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

இராமனோ “தீமையை விளைவிக்கும்.., அந்த வில்லையே ஒடித்துவிடுகின்றான்”.

பிறருடைய எண்ணங்களைப் பகைமையாக்கும் அல்லது ஒருவருக்குத் தீமை செய்யும் உணர்வினைத் தன் உடலிலிருந்து நீக்குகின்றான்.   அப்பொழுதுதான் “அரவணைக்கும் சக்தியான.., அந்தச் சீதாவைத் தன்னுடன் அரவணைத்து” அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழ்ந்தான்.

ஆக, உலகில் “நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும்” என்ற இந்த உணர்வு வருவதைத்தான் “கல்யாணராமா..,” என்று காட்டினார்கள். “எண்ணங்கள்.., நமக்குள் ஒன்றாகக் குவித்து” வரும் நிலையைக் காவியத் தொகுப்புகள் கூறுகின்றது.

இராமனைக் காட்டப்படும் பொழுது வீர தீரம் படைத்தவன். பராக்கிரமம் வாய்ந்த அவன் “மற்றவர்களைக் கொன்றான்..,” என்று தான் இவர்கள் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் இராமன் கடவுள் என்று சொல்லும் பொழுது இன்னொரு சாரார் “வாலியை ஏன் மறைந்திருந்து தாக்கினான்..,? இவன் எப்படி வீரன் ஆவான்..?” என்று அவர்களுடைய அளவு கோல்படி வான்மீகி மாமகரிஷி காட்டிய நிலைகளைப் “பட்டி மன்றங்கள் வைத்துத்தான்.., சீறிப்பாயும் நிலையில்” உள்ளது.

ஆனாலும், சீதாராமன் அந்த வாலியை.., எதற்காக “மறைந்திருந்து தாக்கினான்..,” என்று வான்மீகி மாமகரிஷி காட்டிய நிலைகளைப் பார்ப்போம்.

சுவை கொண்ட உணர்வு கொண்டு கல்யாணராமனாக வாழும் தன்னுடன் அரவணைத்து வாழும் பண்பு கொண்டவன் என்று காட்டுகின்றார்.

உதாரணமாக, ஒருவன் “நோயால் வாடுகின்றான்..,” என்றால் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் என்னவாகும்?

அவனின் நிலைகள் நமக்குள் வந்து “அது வாலி..,” என்ற நிலைகளில் நம்மை அடக்கிவிடும்.

ஆகவே தான் அந்த வாலியை அடக்கும் வல்லமையாக இராமன் என்ன செய்தான்?

“தீமையில் வாடும்..,” உணர்வின் தன்மையைத் “தனக்குள் நேர்முகமாகப் பார்க்காதபடி” அந்தத் தீமையின் வலிமை தனக்குள் வராதபடி அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் செலுத்திக் கொண்டான்.

அந்தத் தீமையின் வலு தன்னைத் தாக்கிடாது பாதுகாத்து அருள் ஒளியின் தன்மையை அவன் உடலுக்குள் பாய்ச்சி அவனில் விளைந்த பகைமை உணர்வை அழித்தான்.

தான் நேர்முகமாக இல்லாதபடி அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து “அந்த நோயாளிக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும்..,” என்று “நோயால் வாடும் அந்த உணர்வின் தன்மையை - அந்த வாலியை” அழித்தான்.

ஆக, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் உணர்வின் தன்மையை அங்கே தெளிவாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.

பகைமை உணர்வால் நோயால் வாடுபவனிடத்தில் அதை யார் நுகர்ந்தறிந்தாலும் பரிவு கொண்டு பார்த்தாலும் “அவனுடைய வலிமை – வாலி..,’ எவரைப் பார்த்தாலும் “சம வலிமை பெற்றுக் கொள்வான்” என்று காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

பண்பு கொண்ட நீங்கள் ஒரு நோயால் வாடிக்கொண்டிருப்பவர்களை நுகர்ந்தால் என்ன ஆகும்? உங்கள் வலிமை உடனே இழக்கப்படும்.

“அய்ய்யோ.., உனக்கு இப்படி ஆகிவிட்டதே..,” பதட்டமும் பயமும் தனக்குள் நடுக்கமும் பலவீனமும் தான் அங்கே உருவாகும். அதனால் தான் இத்தகைய உணர்வுகளுக்குக் “காரணப்பெயர்.., வாலி..,” என்று வைத்தார் வான்மீகி மாமகரிஷி.

வாலியை அடக்குவதற்கு “அருள்ஞானியின் உணர்வைத்தான்” துணை கொண்டான் இராமன். தீமையான உணர்வுகள் தனக்குள் வராது அருள் மகரிஷிகளின் உணர்வால் தனக்குள் தடுத்துக் கொண்டான்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.