ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 5, 2017

புருவ மத்தியின் இரகசியம் என்ன?

ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை தன் உயிருடன் ஒன்றி மலம் போன்று உண்டு.

அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.

அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை “ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக.., ஒன்று” உருவாகின்றது.

யானைக்கும் இத்தகைய நிலை உண்டு. “யானை மதக்கல்” என்பார்கள். நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.

ஆக, உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.

அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்.., போட்டு வைப்பார்கள்”.

அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று “ஜொலிக்கும்”.

இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.

இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.

ஆனால், வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.

120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.

இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிர் வழி நாம் சுவாசித்தால் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும். ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

“உயிருடன் ஒன்றி..,” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.