ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2017

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைப் பெறச் செய்யும் தியானம்

அகஸ்தியன் தன் தாயின் கருவிலே சிசுவாக இருக்கும்போது பல பச்சிலைகளின் வாசனைகளையும் மூலிகைகளின் மணங்களையும் அவன் நுகர்ந்ததால் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றான்.

அவ்வாறு அவன் நுகர்ந்தறிந்த உணர்வின் அணுவாக விளைய வைத்த உணர்வலைகள் இந்தப் பூமியிலே உண்டு. அதை நாம் பெற முடியும்.

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது அவனுக்குள் விளைந்த சக்திகளை நம் உடலில் வளரும் அணுக்கருக்களின் கருவில் அருள்ஞானத்தை இப்பொழுது உருவாக்குவோம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் வாசனைகளை எண்ணித் தியானிக்கும் பொழுது எவர் எவருக்குக் கிடைக்கின்றதோ அவர்கள் அருள் ஒளியின் சக்தியைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

கிடைக்கவில்லை என்றால் விரக்தி அடைய வேண்டாம்.

அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்களைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதைப் பெற்று வளர்த்துக் கொள்ள முடியும். அதை உருவாக்கிட முடியும்.

இப்பொழுது யாம் சொல்லக்கூடியதை எல்லாம் ஏங்கிப் பெறவேண்டும் என்ற அந்த ஈர்ப்புடன் தான் இருத்தல் வேண்டும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு ஏங்கித் தியானியுங்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலங்களில் அவனின்றி வெளிப்பட்ட உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அவன் கருவில் வளரும் பொழுது நுகர்ந்ததும் பிறந்தபின் அவன் நுகர்ந்தறிந்த ஆற்றல்மிக்க சக்திகளும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதையே திரும்பத் திரும்ப ஏங்கி அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள். உங்கள் உடலில் உள்ள அணுக்களின் நிலைகளில் அகஸ்தியன் பெற்ற பச்சிலை மணங்களையும் மூலிகை வாசனைகளையும் பெருக்குங்கள்.

அவன் நுகர்ந்தறிந்த நறுமணங்கள் உங்கள் உடலுக்குள் புகுவதை நீங்கள் அறியலாம்.

இதை நுகரப்படும் பொழுது அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும். நஞ்சினை வென்றிடும் ஆனந்த நிலைகளான அந்தச் சக்திகள் தியானிக்கும் பொழுது உங்களுக்குள் இணையும்.

இதன் மூலம் பல கொடுமையான தீமைகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் பகைமைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். விண்ணின் ஆற்றல் பெற முடியும். ஏகாந்த நிலை அடையலாம்.