ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2017

பரமபத விளையாட்டின் உட்பொருள்

நாம் எல்லோருமே நல்ல குணங்களைக் கொண்டவர்கள் தான்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களில் சொர்க்கவாசலைத் திறக்கும் பொழுது “எப்படி எண்ண வேண்டும்..,? என்று சொல்லியிருந்தாலும் சொர்க்கவாசலைத் திறந்த பின் அந்த “ஆண்டவன்.., அருள் கொடுப்பான்” என்ற ஏக்கத்தில் தான் செல்கின்றார்கள்.

ஒருவரை ஒருவர் இடித்து, முண்டியடித்துக் கொண்டு சென்று அங்கே வரம் கேட்கச் செல்கின்றனர்.

ஆனால், அப்பொழுது வெறுப்பு உணர்வு அங்கே தோன்றப்பட்டு நரகலோகத்திற்குத்தான் போகச் சொல்லுமே தவிர சொர்க்கவாசல் என்று போக முடியாது.

நல்ல குணங்களைக் காக்கப்படவேண்டும் என்றால் அங்கே முதலில் முந்திச் செல்வோருக்கு அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுத்துவிட்டால் நமக்குள் “பகைமை உணர்வு புகாது..,” அருள் ஒளியின் உணர்வை வளர்த்துச் சொர்க்கலோகம் செல்லும் பாதையாக இதை அமைத்துக் கொடுக்கும் நம் உயிர்.

ஆனால், அப்படி யாரும் செல்வதில்லை. கோவிலில் சென்று பாருங்கள்.

இரவெல்லாம் முழித்திருப்பதற்காக பரமபதத்தைக் கொடுத்து தாயக் கட்டையை உருட்டச் செய்து விளையாடுவார்கள்.

தாயத்தைப் போட்டுச் சிறுகச் சிறுக மேலே ஏறும் பொழுது தாயத்தில் ஒரு எண் அதிகமாக விழுந்து விட்டால் ஏணிப்படி வரும். “சர்..ர்ர்..” என்று மேலே போகும்.

அடுத்து தாயக் கட்டையில் எண் தவறி விழுந்துவிட்டால் பாம்பின் வாயில் சிக்க நேர்ந்தால் “சர்..ர்ர்..” என்று கீழே இறக்கிவிடும்.

இந்த வாழ்க்கையின் நிமித்தம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம்முடைய எண்ண ஆசைகள் எப்படி மேலே செல்கிறது என்றும் அடுத்த நிமிடம் நம்மை எப்படி உருக்குலையச் செய்கின்றது என்றும் காட்டப்படுகிறது.

பரமபதம் அடையும் பருவம் (பக்கத்தில்) வரும் போது பெரிய பாம்பே இருக்கும்.

“நான் இத்தனையும் கடந்து.., வந்துவிட்டேன்..,” என்று “வெற்றி நிலையைக் கொண்டாடினாலும்” அந்தப் பாம்பினத்தில் இந்தக் காய் வந்துவிட்டால் நேராகப் “பன்றி உடலுக்கே..,” கொண்டு வந்து நிறுத்தும்.

பரமபத விளையாட்டில் பார்க்கலாம்.

மனிதன் எப்படித் தெளிந்திட வேண்டும் என்றும் அக்காலங்களில் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து “மனிதன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்? என்ற நிலையைக் காட்டியுள்ளார்கள்.

ஆகவே, நமக்குள் வரும் “தீமைகளை அகற்றத் தவறினால்” விஷமான உணர்வுகள் உடலுக்குள் விளைந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறுபடியும் மனிதனல்லாத உடலைப் பெறச் செய்துவிடும் நம் உயிர்.

பின், பன்றி தன் உடலில் எப்படித் தீமைகளைப் பிளந்ததோ மறுபடியும் தீமைகளைப் பிளந்து தான் நாம் மனிதனாக வர முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “பரமபதம்’ என்ற நிலையில் “என்றுமே..,” அழியா உடலைப் பெறத் தகுதி பெற்ற மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்தல் வேண்டும்.

முதல் மனிதன் அகஸ்தியன் அங்கே விண்ணுலகம் சென்றான், துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்ற நிலையில் ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரும் நஞ்சான உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றி அகஸ்தியன் சென்ற எல்லையை நாமும் அடைய வேண்டும்.