ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2017

சொர்க்கவாசலை நாம் எப்படித் திறக்க வேண்டும்?

வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய முழித்திருப்பார்கள். ஏகாதசி அன்று விரதமும் இருப்பார்கள். ஏனென்றால் சொர்க்க வாசலை அப்பொழுதுதான் திறப்பார்கள்.

முன்னாடி இருக்கும் வாசல் வழியாகத்தான் எல்லோரும் வழக்கமாக ஆலயத்திற்குள் செல்வார்கள். ஆனால், வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசலைத் திறப்பார்கள்.

அப்படி வடக்கு வாசலைத் திறப்பதில் உண்மை உண்டு.

உயர்ந்த உணர்வுகளைப் பெறக் கூடிய முறைகளை சாஸ்திரங்களின்படி வகுத்திருந்தாலும் நாம் அதை அறியவில்லை. ஆக, விடிய விடிய எதை எதையோ நினைத்துக் கொண்டிருப்போம். பெரும்பகுதி

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசலைத் திறப்பார்கள். பெருமாள் கோவில் என்கிற பொழுது இந்த உடலுக்குள் எல்லாம் பெருமாளாக இருந்து ஆட்சி புரிவது.

விஷ்ணு என்றாலும் பெருமாள் என்றாலும் நாராயணன் என்றாலும் எல்லாமே இந்த உயிர் தான். இதை நாம் “திறப்பது.., எப்பொழுது?” என்ற நிலையை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு கோவிலுக்குள் போனால் சுப்ரபாதம் பாடுவார்கள். ஆண்டாளுடைய திருப்பாவையை அந்த வெண்பாவைப் பாடுவார்கள்.

ஆனால், சாங்கிய சாஸ்திரங்களைத்தான் காட்டுகின்றார்கள். அந்தச் சொர்க்கவாசல் என்பது எது என்ற நிலைகளை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை.

நம் கண்கள் புறக்கண் ஆக இருக்கின்றது. புற நிலைகளைப் பார்க்க முடிகின்றது.

நாம் கண்ணால் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்து உயிரிலே படும் பொழுது அந்த உயிர் அகக்கண்ணாக இருக்கின்றது. அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் புகுத்துகின்றது.

சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்றும் இதைக் காட்டுகின்றார்கள்.

அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவாக்கி கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தி பெறவேண்டும் என்று இந்த உயிருடன் இணைத்து நம் உடலுக்குள் அதைப் பரவச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை இவ்வாறு உள் செலுத்தினால் இது “சொர்க்கவாசல்”.

இதன் வழிப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைவுபடுத்துகின்றனர்.

இது எப்பொழுது?

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் இந்த நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இந்த வாசல் வழியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.

ஆகவே, இந்த மனித உடலுக்குப் புருவமத்தி தான் சொர்க்கவாசல். அதன் வழி உடலுக்குள் சென்று “தீமைகளை அகற்றும் நிலை பெற்றது”. இந்த வாசலைத்தான் நாம் திறக்க வேண்டும்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அகப்பொருளை அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலைகள் நாம் பெறுதல் வேண்டும்.