ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2016

காண்டீபத்தை ஒடித்ததால் சீதையை மணந்துகொள்கின்றான் “கல்யாணராமன்” - விளக்கம்

காட்டில் வாழும் உயிரினங்கள் ஒரு கூட்டமாகச் செல்லும்போது ஒரு தாய் தன் குட்டி வரவில்லை என்றால் கூட எட்டிப் பார்க்கும். வந்துவிட்டதா.., இல்லையா? என்று பார்த்துக் கொள்ளும்.

வெளியிலே சென்றால் ஒரு மிருகத்தை தன் எதிரியைப் பார்த்ததென்றால் உள்ளே பாதுகாப்பாகக் கொண்டு வைத்துக்கொள்ளும்.

இதெல்லாம் எப்பொழுது? மிருகமாக இருக்கும்போது இந்த உணர்வு வந்தது. அது ஒன்று சேர்த்து வாழும் அரவணைக்கும் தன்மை ஒரு குடும்பத்திற்கு வருகிறது.

ஆனால், நமக்கு நம் குடும்பத்தில் இன்று வருகிறதா? இல்லை. எத்தனை பேர் வருகின்றார்கள்? பாருங்கள்.

இவன் என்னை இப்படியே பேசிக் கொண்டிருக்கின்றான். அம்மா அவன் பக்கம்தான் பேசிக் கொண்டுள்ளது என்று சண்டை போடுபவர்கள்தான் இருக்கின்றார்கள்.

அவனுக்குத்தான் அம்மா ஆதரவு கொடுக்கின்றார்கள், எனக்கு ஒன்றும் செய்ய மாட்டேன் என்கிறது. நான் அம்மா சொன்னபடியெல்லாம் கேட்கிறேன் என்று சொல்வதை நீங்கள் பார்க்கலாம்.

அம்மா என்ன செய்வார்கள்? அவன் அறியாமல் செய்கின்றான், எப்படியும் திருந்திவிடுவான் என்று கொஞ்சம் அரவணைப்பார்கள். அது இங்கே பொறாமையாகிவிடும்.

நான் உதவி செய்கிறேன், அவன் அம்மாவிற்கே எதிரியாக உள்ளான். ஆனாலும், அம்மா அவனுக்குத்தான் உதவி செய்கிறது என்பார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் உருவாகும்போது மனிதனுடைய சிந்தனைகள் நம்மையறியாமலே பகைமை உணர்வுகளை உருவாக்கிக் கொள்கிறோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

அதாவது, அவனும் தாயின் எண்ணப்படி தெளிவாக வேண்டும், தெளிந்தவனாக வேண்டும், தாயின் அருளை அவன் பெறவேண்டும் என்று எண்ணினால் இங்கே பகைமைகள் வராது.

இதையெல்லாம் நம் ஞானிகள் காட்டிய நிலைகளில் இராமாயணத்தில் உற்றுப் பார்த்தால் தெரியும். ஒன்று சேர்த்த உணர்வுகள் எப்படி விளைகிறதென்றும் எண்ணங்கள் ஒன்று சேர்க்கும் நிலைகளைப் பற்றி அதில் சொல்லியுள்ளார்கள்.

இராமன் எப்பொழுது “கல்யாணராமன்” ஆகின்றான்?

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றான். வருபவர்கள் அவரவர்கள் எண்ணங்கள் கொண்டு கற்றுக் கொண்ட வித்தைகளையெல்லாம் வைத்து காண்டீபத்தில் நாண் ஏற்றி ஏவுகிறார்கள்.

ஆனால், இராமன் என்ன செய்கிறான்? வந்தவுடன் காண்டீபத்தையே ஒடித்துவிடுகிறான்.
காண்டீபத்தில் நாண் ஏற்றினால்தான் அங்கே தாக்க முடியும்.
ஆகவே அதை ஒடித்துவிடுகின்றான்.

ஏன்?

தனக்குள் இருக்கும் மற்றவருடைய பகைமை உணர்வை எல்லாம் நீக்கிவிடுகின்றான். அப்பொழுதுதான் அந்த அரவணைக்கும் எண்ணம் அங்கே வருகின்றது.

அடுத்து என்ன செய்கின்றான்? “சீதா” அந்த சந்தோசமான உணர்வைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான்.  சந்தோசமான உணர்வை அரவணைக்கும்போதுதான் “கல்யாணராமா”.

தனக்குள் இருக்கும் தீங்கான உணர்வுகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுத்து, தீமைகளை நீக்கிவிட்டால் அந்த அருள்ஞானம் என்ற உணர்வு வருகின்றது.

இதைத்தான், வான்மீகி அன்று கல்யாணராமா என்று காட்டினார்.