ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2013

முன்னோர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய ஆகாரம்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் சுட்ட சாம்பலைக் கொண்டு போய் கங்கையிலே கரைத்துவிட்டு, எங்கள் அப்பாவிற்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால், இது ஒருக்காலும் நடக்காது.

மந்திர ஒலியைச் சொன்னால், அந்த உயிராத்மா
இன்னொரு மந்திர உடலில் வளர்த்துக் கொண்டு,
பிரிக்கப்பட்ட நிலைகள் கொண்டு,
மந்திர காரியங்களுக்குப் பயன்படும்.

அத்வைதம், சூட்சம நிலைகள் கொண்டதைத் தன் எண்ணத்தால் சுவாசித்து, தன் உடலுக்குள் நல் உணர்வின் தன்மையைப் பெருக்கி, அன்று அந்த மகரிஷிகள் சொன்ன வழிப்படி, விண் செல்ல வேண்டுமென்று உணர்த்திய ஆதிசங்கரரின் ஆற்றலை நாம் பெறுவோம்.

அவர் வழிகளிலேயும், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அரும்பெரும் ஆற்றலின் துணை கொண்டும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை நாம் பெறவேண்டும்.

இங்கே ஒரு ஐக்கிய கூட்டமைப்பாக, நாம் அனைவருமே சப்தரிஷி மண்டலங்களின் ஒளி சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குகின்றோம். 

அதைப் போல, உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவினுடைய நிலைகள், நம்முடன் பழகிய அவர்களின் உணர்வுகள் இங்கே பதிவாகியிருக்கின்றது.

அதன் தொடர் கொண்டு, வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து பழகிக் கொண்டவர்கள், அந்த உணர்வுடன் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள், சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று உந்திச் செலுத்தும் பொழுது, அங்கே இணைந்துவிடுகின்றது.

அவ்வாறு செலுத்தி விட்டால், சப்தரிஷி மண்டலங்களின் ஒளியான உணர்வலைகள், நாம் அனுப்பும் உயிராத்மாக்களுக்கு ஆகாரமாகின்றது.


நாம் குடும்ப வாழ்க்கையில் இருப்போர் அனைவரும் இந்த ஆத்மசுத்தி செய்து, இறந்தவரின் உயிராத்மாவினுடைய நிலைகளை, இன்னொரு கூட்டுக்குள் புகாதபடி, அந்த அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று உந்தித் தள்ள வேண்டும்.

 அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்துடன் செலுத்தப்படும் போது, அந்த மகரிஷியின் அருளாலே சமைத்து அனுப்பப்படும் ஒளி உணர்வுகளின் சத்துக்கள், நாம் அனுப்பும் இந்த உயிராத்மாக்களுக்கு ஆகாரமாகச் சென்று, அது ஒளி சரீரமாக வாழும்.

பிறர் நலம் பெற வேண்டுமென்று எண்ணத்தைத் தன்னுடைய உடலிலே ஓங்கி வளர்த்துக்கொண்டவர்கள் சப்தரிஷிகள்.

அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, பிறிதொரு மனிதன் எண்ணங்களைத் தனக்குள் கவரச் செய்து, அந்த அன்பு உள்ளமான பாசத்தின் உணர்வுகளைத் தனக்குள் ஏங்கச் செய்து, அதன் வழிகளிலேதான் இந்த உடலைவிட்டு சென்றபின், உயிராத்மா விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டினார்கள் மகரிஷிகள்.