ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2013

பேரண்டத்தின் இயக்கம் - UNIVERSE

நாம் இன்று ஒரு 2000 சூரியக் குடும்பத்தில் இருக்கின்றோம். இது ஒருங்கிணைந்து இயக்கச் செய்து, பெரும் குடும்பமாக 2000 சூரியக் குடும்பங்கள், இதைப் போல எத்தனையோ 1000-க்கணக்கான சூரியக் குடும்பங்கள் இந்தப் பேரண்டத்தில் உண்டு.

ஒரு பிரபஞ்சம் என்பதே பல கோடி மைல்களில் எண்ணிலடங்காத தூரத்தில் உள்ளது. அதை எட்டிப்பிடிப்பதற்கு இன்று விஞ்ஞானிகள், ஒரு நொடிக்குள் பல இலட்சம் மைல்கள் சென்றாலும், அதை ஒளி ஆண்டு (LIGHT YEAR) என்று பல ஆண்டுகளைச் சொல்கின்றார்கள்.

இவ்வாறு விரிவடைந்த இந்த உணர்வின் தன்மை ஒரு பிரபஞ்சத்திற்குள் பேரண்ட குடும்பத்தின் கலவைகள் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலைகள் கொண்டு,
அது திரண்டு, உருண்டு,
ஒவ்வொரு பிரபஞ்சமும் இணைந்த நிலைகள் கொண்டு,
ஒன்றின் துணை கொண்டு ஒன்று,
ஒரு வட்டமாக, சுழற்சியின் நிலை பெறுகின்றது.

ஒரு சூரியக் குடும்பம் அது எவ்வாறு ஒரு பிரபஞ்சமாக இயங்கி, ஒரு சீரான நிலையில் அது இயக்கப்படுகின்றதோ, இதைப் போல பேரண்டக் குடும்பமும் ஒரு சீராக இயங்கி, பல சூரியன் அதிலே உருவாகின்றது.

இதைப் போன்று, பேரண்டத்தின் பெரும் குடும்பத்திலே, ஒரு சூரியக் குடும்பத்தில், வியாழன் கோளுக்கு ஒரு ஆற்றல் இருந்தாலும், செவ்வாய்க் கோளுக்கு ஒரு ஆற்றல் உண்டு.

இதைப் போல, பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும். கோள்களில் சில வித்தியாசங்களும், சில உணர்வின் மாற்றங்களும் இருக்கும்.


அதே போன்று அதிலே தோன்றிய பூமியின் தன்மையிலும் அங்குள்ள மனிதனுடைய வளர்ச்சிகளிலேயும், ஒவ்வொரு பூமிக்கும் ஒவ்வொரு மனித வளர்ச்சி உண்டு.

அதாவது, ஒரு பிரபஞ்சம் தோன்றினால், அங்கே ஒரு பூமி உண்டு. அந்த பூமிக்குள்தான் உயிரணுக்களின் தோற்றம் உண்டு. அது தன் வளர்ச்சியில் எடுக்கும் பொழுது மனிதனாகின்றது.

ஆக, ஒவ்வொரு சூரியக் குடும்பத்திற்குள்ளும் மனிதன் உண்டு. நம்மைப் போலவே, பேரண்டத்தில் எத்தனையோ பூமிகளில் மனிதர்கள் உண்டு.

இதையெல்லாம் யாம் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை. நமது குருநாதர் எமக்கு உணர்த்திய அருள் வழியில், யாம் உணர்ந்த உண்மைகளைத்தான் சொல்லுகின்றோம். அதை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். பதிவாக்கிய அந்த ஆற்றல்களை நீங்கள் நுகர்ந்தால், நீங்களும் உணர முடியும்.