ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 21, 2013

துன்பங்களை நீக்கக்கூடிய கடுமையான ஆயுதம் கொடுக்கின்றோம்

பிறர் செய்யும் தவறுகளைப் பார்த்து, தவறு என்று உணர்ந்தாலும், ஆபத்து வரும் பொழுது, ஆபத்து வருகின்றது என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம் உடலைக் காத்தாலும்,
சுவாசித்த உணர்வுகள்
நமக்குள் மன வலுவைக் குலைக்கச் செய்யும்.

ஆக, அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு ஆற்றல் தேவை.

நீங்கள் அத்தகைய ஆற்றல் பெறும் நிலைக்காகத்தான் யாம் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நமது குருநாதர் கொடுத்த அருள் வாக்கின் தன்மையை, உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் கொடுக்கின்றோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், பல சந்தர்ப்பங்களில் எமக்குத் துன்பத்தை ஊட்டி, அவர் கொடுத்த ஆற்றல்மிக்க சக்தியை யாம் சுவாசிக்க நேர்ந்து, துன்பத்தை நீக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு, எப்படி ஒளியின் சரீரம் பெறவேண்டும்? எப்படிப் பெறமுடியும்? என்பதைப் பல அனுபவங்களின் வாயிலாகக் கொடுத்தார்.

குருநாதர் கொடுத்த ஆற்றல்மிக்க சக்திதான்,
யாம் 12 வருட கால அனுபவத்தில் வளர்த்த
பல இன்னல்களைப் போக்கும், துன்பங்களைத் துடைக்கும்
இந்த ஆற்றல்மிக்க சக்தியின் வாக்குகள் தான் ஆத்ம சுத்தி.

பல இன்னல்களைத் தாங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, அந்த ஒவ்வொரு இன்னலையும் நீக்குவதற்கு, பேரண்டத்தின் ஆற்றலையும், ஞானிகளின் உணர்வலைகளையும் சுவாசித்து, அதை உடலுக்குள் அணுக்களாக மாற்றுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஒரு துன்பம் வரும் பொழுது, ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அப்படிச் சுவாசிக்கும் பொழுது அந்த மெய்ஞானிகள் விளைய வைத்த ஞானத்தின அருள் ஒளிகள், நீங்கள் நினைத்த மாத்திரத்தில் சுலபத்தில் வரும். அத்தகைய தன்மைதான் யாம் கொடுக்கும் இந்த வாக்கு, இந்த ஆத்ம சுத்தி என்பது. 

இது துன்பங்களை நீக்கக்கூடிய கடுமையான ஆயுதம்.

இதை நீங்கள் எடுக்கும் பொழுது, துன்பம் நீங்கும், நோய்கள் நீங்கும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் புனிதம் பெற முடியும். ஆகவே இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

விவசாயம் செய்யும் பொழுது, ஒவ்வொரு பயிரினங்களுக்குத் தக்கவாறு உரத்தைப் போட்டு, நீரை ஊற்றி வளர்க்கச் செய்கின்றோம். 

அதைப் போன்று, காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நாம் சுவாசித்து, நமக்குள் அதைக் கூட்டி, நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.