ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2013

துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம் - ஞானகுரு

1. அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம் - அபூர்வ சக்தி
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் இருவரும், மிருகங்களிடமிருந்தும், விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக, விஷத்தை முறித்திடும் பச்சிலைகளையும், மூலிகைகளையும் அரைத்து தங்கள் உடலில் பூசிக் கொள்கின்றார்கள்.

அந்தத் தாய் கர்ப்பமுற்ற சந்தர்ப்பத்தில் அந்த வாசனகளை நுகர நேருகின்றது. தாய் நுகர்ந்த அந்த பச்சிலைகளின் வாசனைகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து,
கருவில் இருக்கும் குழந்தைக்கு
விஷத்தை முறித்திடும் சக்தியாகக் கிடைக்கின்றது.

இப்படி பத்து மாதம் கருவில் வளர்ந்து பிறந்தபின், அந்தக் குழந்தை இருக்கும் பக்கம் பாம்போ, தேளோ, புலியோ, நாயோ, நரியோ வருவதில்லை. இவனைக் கண்டால் அஞ்சி ஓடிவிடுகின்றது. இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வருபவை அனைத்தும் கடும் விஷமானது. அவைகளும் இவனுக்குள் அடங்குகின்றது.
அவனுடைய பருவம் வரும் பொழுது, செடி கொடிகளின் உணர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான். மனிதன் தன் உணவிற்காக ஆடு மாடுகளைச் சாப்பிட்டால், அந்த உணர்வுகள் பெருகி, மனிதன் ஆடாக, மாடாகப் பிறக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்கின்றான்.

அதனால், தன் உணவிற்காக பழங்களையும், காய்களையும் சாப்பிடுகின்றான். அவைகள் தன் உடலில் சேர்ந்து கொள்கின்றது. அவ்வாறு சேர்ந்து கொண்டபின், உடலை விட்டுச் சென்றால் காய்களையும், பழங்களையும் சாப்பிடுகின்ற ஜீவராசிகளாகப் பிறக்கின்றது என்று அறிகின்றான்.
2. வேகவைத்துச் சாப்பிடும் பழக்கத்தை முதலில் உருவாக்கியவன் அகஸ்தியன்
அதற்காக வேண்டி, பல பயிரினங்களை ஒன்றோடொன்று சேர்த்து மனிதனுக்கு உகந்த சாப்பாடு செய்யக்கூடிய பயிரினங்களை முதன் முதலில் அகஸ்தியன்தான் உருவாக்குகின்றான். புல்களில் இருப்பதை மற்றதுடன் சேர்த்து அரிசி, கேழ்வரகு, வரகு போன்ற நவ தானியங்களை உருவாக்குகின்றான்.

அப்படி உருவாக்கினாலும், அதை வேகவைத்துப் பக்குவப்படுத்தி ருசியாகச் சாப்பிட ஆரம்பிக்கின்றான். நெருப்பு இருந்தால்தான் வேக வைக்க முடியும். கல்லுடன் கல் உராயும் பொழுது நெருப்பு உருவாகும். அதில் கரியைப் போட்டால் பற்றிக்கொள்ளும்.

பின்பு, அதில் காய்ந்த செத்தைகளைப் போட்டு, ஊதி அணையாமல் செய்துவிடுவார்கள். இப்படி உணவைச் சமைத்துப் பழகினார்கள். ஒன்றை வேகவைத்தால் அது முளைக்காது என்று முதன்முதலில் கண்டுபிடித்தவன் அகஸ்தியன் தான். இப்படி பல உணர்வின் நிலைகளை அறிகின்றான்.

அந்தச் சமயத்தில் அவனுக்கு வயது 16 ஆகின்றது. அப்பொழுது அவனுக்குத் திருமணத்தை முடிக்கின்றார்கள். திருமணமானபின், அகஸ்தியன் தான் கண்ட பேருண்மைகளை, தன் மனைவிக்குச் சொல்கின்றான்.

அதைக் கேட்டு, தன் கணவன் கண்ட நிலைகளை மனைவியும் தெரிந்து கொள்கின்றாள். கணவன் மேலும் உயரவேண்டும் என்று இரண்டு பேரும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியை எடுத்து வளர்க்கின்றார்கள்.
3. மின்னலைச் சுவாசித்து, பேரொளியாக மாறினான் அகஸ்தியன்
இப்படி அண்டத்தின் அகண்ட நிலைகளை இருவரும் அறிந்து கொண்டபின், இரு உணர்வும் ஒன்றாகின்றது. அப்படி ஒன்றானபின், ஒளியின் தன்மையும் இருளை நீக்கக்கூடிய சக்தியும் அவர்கள் உடலிலே விளைகின்றது.

பூமியின் துருவப்பகுதியை உற்று நோக்கி இதிலிருந்து வரும் சக்தியை எடுக்கின்றான். அப்படிச் சேர்த்த உணர்வுகள் இருவர் உடலிலும் விளைகின்றது.

மின்னலின் ஒளிக்கற்றைகளைச் சுவாசித்து,
உடலுக்குள் சேர்த்தவுடன், இருவரின் உடலிலும்
ஒளியின் உணர்வுகள் உருவாகின்றது.

அவர்கள் இருவரும் துருவப் பகுதியைக் குறி வைத்து எண்ணும் பொழுது, இருவரின் உயிரும் ஒன்றாகி, வெளியில் வரும் பொழுது, அந்த எல்லையைச் சென்றடைகின்றது.

இவர்கள் இரண்டு உயிர், இரண்டு நட்சத்திரங்கள். கார்த்திகை நட்சத்திரம், ரேவதி நட்சத்திரம் இது இரண்டும் ஒன்றாகிவிட்டால், நான்கும் சேர்ந்து பிரம்மமாகின்றது. மின்னல் எப்படி ஆகின்றதோ அதை உருவாக்கக்கூடிய சக்தியாகின்றது. துருவ நட்சத்திரமாகின்றான்..

நமது பூமிக்கு நேராக வடகிழக்கில் இருக்கின்றது துருவ நட்சத்திரம். இப்படி அகஸ்தியன் துருவனாகி, திருமணமாகி துருவ மகரிஷியாகி, இரு உயிரும் ஒன்றி துருவ நட்சத்திரமானான்.
4. துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஆயுள் மெம்பராக இணைக்கின்றோம்
இப்பொழுது இந்த உபதேசத்தின் வாயிலாக, துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைத்து, அந்த ஒளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்துவிட்டால், தீமைகளை நீக்கிவிட்டு, தீமைகளை நீக்கக் கூடிய சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள். அவன் கண்டுபிடித்த உணர்வகளெல்லாம் உங்களுக்குள் வருகின்றது. அத்தகைய நிலைகளை நீங்கள் எல்லோரும் பெற எமது அருளாசிகள்.