ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2013

மெய் ஒளியைப் பெறச் செய்யும் "மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை"

1. மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை
உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். நம் மூச்சின் நிலைகள் பிறருக்குத் துன்பத்தைப் போக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் அந்த நிலை பெறவேண்டும் என்றும்
நீங்கள் பெற்ற அந்த நிலையை
இயற்கையின் உண்மையின் சக்தியைத் தெரிந்துணர்ந்து
அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் வளர்ப்பதற்குத்தான்
மெய்ஞான வளர்ப்பு திருச்சபையை ஏற்படுத்தியுள்ளோம்.

இதில் அங்கத்தினர்களாகச் சேர விரும்புபவர்கள், குடும்ப சகிதமாகச் சேர்ந்து கொள்ளலாம். சேர்ந்து கொண்டால், கொடுக்கப்படும் அருள் ஞானச் சக்கரத்தில் நம் உடலைப் புனிதமாக்க வேண்டும் என்பதற்கு சில உண்மையின் நிலைகள் போடப்பட்டுள்ளது. 
அதன் வழி நீங்கள் பின்பற்றுவதற்கும், அதிலே நீங்கள் மெம்பராகச் சேர்வதற்கு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் மெம்பராக இருப்பவர்கள் குடும்ப சகிதமாக இந்தப் பதிவைச் செய்து, இந்த முறைப்படி கூட்டுக் குடும்ப தியானங்களை மேற்கொள்ளுங்கள்.

கணவன் மனைவி ஆத்ம சுத்தி செய்து கொண்டு, ஒருவருக்கொருவர் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
எந்தத் துன்பத்தைச் சந்தித்தாலும்,
ஆத்ம சுத்தி செய்து கொண்டு
அந்தத் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற
சொல் தொடரே உங்களுக்குள் வரவேண்டும்
என்று இதை வரிசைப்படுத்தி,
இந்த மெய்ஞான திருச்சபையின் தியான வளர்ப்பின் தன்மையாக அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சுழற்சி வட்டம்
ஒவ்வொருவரும் இங்கே சந்திக்கும் நிலைகள் கொண்டு, உங்கள் மூச்சும் பேச்சும், இங்கே வருபவர்களுக்கு நலம் பெறச் செய்யும். உங்கள் மூச்சும், பேச்சும் உலக மக்களுக்கு நன்மை செய்யும். அதைப் போல,
ஈஸ்வராய குருதேவர் சுழற்சி வட்டமான
அந்த உணர்வுக்குள் ஒரு பிரபஞ்சமாகி,
அந்தப் பிரபஞ்சத்திற்குள்
மெய் ஒளியின் தன்மையை நாம் சமைக்கும்
இந்த ஆற்றல்மிக்க நிலைகளை நாம் தோற்றுவிக்கும்
மெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையாக தோற்றுவிக்க
உங்கள் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு, நாம் இதுவரையிலும் சொன்ன இந்த உணர்வுகள், உலகத்திற்கு வழிகாட்டியான நிலைகளில், நாம் அனவரும் வரவேண்டும் என்ற நிலைக்குத்தான் ஆரம்பித்துள்ளோம்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது, காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் மிக்க, ஆற்றல் மிக்க, அருள் ஒலிகள் உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பமோ, வேதனையோ மனக்கவலையோ, சஞ்சலமோ இவைகளிலிருந்து விடுபட்டு, எல்லோரையும் ஓளி நிலை பெறச் செய்யும் நிலைக்கேதான், இந்த மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை.

இயற்கை எவ்வாறு இயங்குகின்றது? அந்த இயற்கையின் நிலையில், சூரியன் எவ்வாறு ஒளி நிலைகள் பெற்றது? என்ற பேருண்மை அது மெய் உணர்வின் தன்மை.

ஆக, சூரியன் ஒளி நிலை பெற்றது போன்று, நாம் உயிரணுவாகத் தோன்றி மனிதனாக வரும் பொழுது, ஒளி நிலை பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

எப்படி ஒரு அணு சூரியனாக மாறியதோ, அதைப் போல ஒரு உயிரணு மனிதனாகத் தோன்றியபின்,
உணர்வுகள் ஒளியாக மாறி
விண் செல்வதே கடைசி நிலை.

ஆனால், இந்த வாழ்க்கையின் உணர்வு கொண்டு மனிதனுடைய வேட்கையின் ஆசைகளை நாம் கூட்டிக் கொண்டால், அதிலே சிக்கிக் கொண்டால், அதன் வழிகளிலே நம்மை இட்டுச் சென்றுவிடும். அதிலிருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த நிலை.
3. மெய் ஒளி, மெய் ஞானம் பெறுவதற்குத்தான் திருச்சபை
அந்த மெய்ஞானிகள் காட்டிய துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல்மிக்க சக்தியின் நிலையை நாம் பெறுவதற்கே இந்தத் திருச்சபை. ஒருங்கிணைந்த நிலைகளில் நாம் செயல்படும் பொழுது, இது ஆற்றல்மிக்க சக்தியாகின்றது.

ஆகவே, இதைக் கேட்டுணர்ந்தோர்கள் என்னமோ, ஏதோ என்ற நிலையில் இல்லாதபடி, நாம் மெய் ஒளியின் தன்மையைப் பெறுவதற்குத்தான் இதிலே வந்திருக்கின்றோம் அன்று மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

நமக்குள் வரக்கூடிய மேல்வலி, மனக்கவலை, மனக்க்குடைச்சல் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வு கொண்டு,
மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறுவோம்,
அந்த உணர்வின் தன்மை எங்கள் உடலிலே சேர்ப்போம்.
எங்களை அறியாமல் எங்களுக்குள் சேர்ந்த இருள்கள் நீங்கும்.
இருள் நீங்கி எங்கள் பேச்சும் மூச்சும் பிறருக்கு நன்மைகள் செய்யும்.
நாங்கள் எடுக்கும் பேச்சும் மூச்சும் எங்களுக்கு நல்லதாகும்.
எங்கள் பேச்சின் தன்மை பார்ப்போர் அனைவருக்குமே நல்லதாகும்
என்று இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு,
ஒவ்வொருவரும் நீங்கள் எடுத்து
இந்த உணர்வின் தன்மை இங்கே பதிவாக்கி,
உலகுக்கு வழிகாட்டிகளாக நீங்கள் உருவாக வேண்டும். எமது அருளாசிகள்.