ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2013

இனி வரும் காலத்தில் தீமைகளிலிருந்து தப்ப பறக்கும் நிலை பெறவேண்டும்

உடல் கொண்ட உயிரினங்கள், மற்ற மிருகங்களெல்லாம் பரிணாம வளர்ச்சியில் வருவது. மனிதர்களான நாம் பரிணாம வளர்ச்சியில் வந்து முதிர்வு பெற்றவர்கள்.

இதிலிருந்து நாம் விண் செல்லும் மார்க்கத்தைத் தவறவிட்டால், நாம் கீழ்நிலையான ஆரம்ப நிலைகளுக்குச் சென்றுவிடுவோம்.

ஆரம்ப நிலைக்குச் சென்றுவிட்டால், நாம் மனிதனாக வரும் வரையிலும், எத்தனை கோடி சரீரங்களில் துன்பத்தை அனுபவித்து இன்று மனித உடலைப் பெற்றோமோ, அந்த நிலையைத் திரும்பவும் எய்யும் தருணம் வந்துவிடும்.

ஆகவே, இன்றைய விஞ்ஞான உலகம், மனிதனுடைய சிந்தனைகள் அழியும் தருணம் வரும் பொழுது, கல்கி இந்தப் பறக்கும் உணர்வினுடைய நிலைகள் பெறவேண்டும்.

அதாவது ஒளியின் தன்மை கொண்டு...
1.விண்ணின் ஆற்றலால்
2.நாளை வரக்கூடிய சந்ததிகளுக்கு
3.ஜீவனூட்டும் மனிதர்களாக இருந்து செயல்படுவோம்.

இதில் நாம் உயர்ந்த நிலைகளை எடுத்துக் கொண்டால், விண் செல்ல முடியும். விண் செல்ல முடியவில்லையென்றாலும், இங்கிருந்து வருபவர்களுக்கு வழிகாட்டும் ஆற்றல்மிக்க உணர்வு கொண்ட சரீரமாக நாம் நிலைத்து நிற்க முடியும்.

இரண்டில் ஒன்று...! ஆக… பின் வரும் சந்ததியர்களுக்கு நாம் குருவாகவும் ரிஷியாகவும் இருந்து செயல்படுத்த முடியும். உலகம் முழுவதற்கும் நாம் எடுக்கும் இந்த உணர்வின் தன்மைகளைப் பெருக்க முடியும்.