ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 1, 2013

மெய் உணர்வின் ஒளிகளை குரு தன் "பார்வையாலே” பாய்ச்சுவார்.

1. மெய்ஞானிகளின் ஆற்றலுக்கு அருகில், சாதாரண எண்ணங்கள் செல்ல முடியாது
சாதாரண மனிதனுடைய எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய்ஞானியின் அருள் உணர்வுக்கு அருகில், நெருப்பிற்கு அருகில் போனால் என்ன செய்யும்? அந்த நெருப்பு சுட்டுப் பொசுக்கி விடும்.

ஆகவே, ஞானிகள் ஆற்றல்மிக்க சக்தி பெற்றவர்கள். அங்கே செல்லப்படும் பொழுது, நாம் எண்ணத்தாலே அவரைக் கவர்ந்து இழுத்துக் கொள்ளவேண்டும் என்றால், நடக்காது.

மெய்ஞானிகள் பெற்ற விண்ணின் ஆற்றல்கள் இங்கே உண்டு. அதை நாம் பெறுவதற்கு, முறைப்படி இந்தத் தியானம் செய்ய வேண்டும்.
அதற்கு குரு பலம் தேவை.
அந்த குருவின் துணை கொண்டுதான்,
ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டுதான் இயக்க முடியும்.
2. குரு துணை கொண்டு, மெய்ஞானிகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்
நமக்குக் கஷ்டம் என்று வரும் பொழுது, ந்தக் கஷ்டத்திலிருந்து விடுபட, மெய்ஞானியின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்று
இந்த ஏக்க உணர்வை நாம் கூட்டி,
சரியான முறையில் தியானமிருக்க வேண்டும்.

அப்படி தியானமிருந்து வந்தால் நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள், நாம் எதை எண்ணுகிறோமோ, அது நம் கண்ணின் புலனறிவிற்கு ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்க்கின்றது.

ஆனால், இந்தக் கண்ணின் புலனறிவிற்கு ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு குருவின் துணை தேவை. ஆக அது குரு பலத்தின் தன்மை கொண்டு, குரு உணர்த்தும் நிலைகள்

அதாவது, உணர்வாலே, சொல்லாலே, பார்வையாலே, இந்த உணர்வு ஒளிகளை குரு என்பவர் பாய்ச்சுவார். 

நமது குருநாதர், ஐந்து விதமமான உணர்வின் தன்மை,
அதை எவ்வாறு காற்றிலிருந்து பிரித்து,
இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை,
நீ எத்தகுதியிலே பெறவேண்டுமென்று எமக்கு உணர்த்தினார்.

அந்த அருள்வழி போல, ஒவ்வொரு நிமிடமும் யாம் உபதேசிக்கும் பொழுதே, உங்களுக்குள் நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் ஆற்றலின் தன்மையை, உபதேசிக்கும் முறைகள் கொண்டு புலனறிவான ஐந்துக்குள்ளும் பாயச் செய்கின்றோம்.

அதாவது, கண்ணின் புலனறிவின் ஊடுருவச் செயலும், அந்தக் கண்ணின் புலனறிவிற்குள், எண்ணும் எண்ணத்தாலே விண்ணின் ஆற்றலை தான் பெறக்கூடிய தகுதியை, கண் பார்வை ஒளியால் எடுக்கச் செய்கின்றோம்.

அதே போல, உணர்வின் ஒளியின் நிலைகள் செவிவழி ஒலிகள் கொண்டு, அதைத் தட்டியெழுப்பும் நிலைகளாலும் புலனின் ஆற்றல் நிலைகள் எவ்வாறு பெறவேண்டுமென்று, ஒவ்வொருவருக்கும் இதைப் பதியச் செய்கின்றோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், நீங்கள் அனைவரும் அந்தச் சக்தியைப் பெறும் விதமாகத்தான், அந்த மெய்ஞானிகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ள, யாம் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.