ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2013

“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” - இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது

ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும், சங்கடங்களையும் நமக்குள் வராதபடி, ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால், இது விஷ்ணு தனுசாகின்றது.

விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால், அடுத்த உடலைப் பெறுகின்றோம். அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால், இன்னொரு உடல் பெறுவதில்லை. உயிருடன் சேர்த்து, உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது, அதுதான் விஷ்ணு தனுசு.

சூரியன் அழிந்தாலும், துருவ நட்சத்திரம் அழிவதில்லை. இந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.

முதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின், இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது, அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.
அது என்றும் ஏகாந்த நிலை,
பெருவீடு, பெரு நிலை.
நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.

நமது கூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமியில் படருகின்றது. இந்த உணர்வுகள் கூடக் கூட, மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும். அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.

நம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை. அந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு.

அன்று இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியுள்ளார். இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது. இந்த உடலிலே ஒளியாக வேண்டும். “அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” நீ உயிராக இருக்கின்றாய், என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.

நம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது.
நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.
நீ ஒளியாக இருப்பது போல்
என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.
பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.
பிறருக்கு நாம் நல்லது செய்யக் கூடிய உணர்வு வரவேண்டும்.

அந்த அருட்பிரசாதம், அவன் இல்லையென்று சொல்லாதபடி
என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை. சாப்பாட்டுப் பசி அல்ல,
அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.
இருளிலிருந்து விடுபடவேண்டும்,
ஏகாந்த நிலை பெறவேண்டும்.

யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.